ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 64வது லீக் ஆட்டத்தில் குஜராத், லக்னோ அணிகள் பல பரிட்சை நடத்துகிறது. லக்னோ அணி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிய நிலையில் குஜராத் அணி முதல் இரண்டு இடத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த சூழலில் குஜராத் அணி இன்று இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியை பயன்படுத்துகிறது. புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குஜராத் அணி இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறது.அகமதாபாத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்மன் கில், நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன். இதனால் இலக்கை துரத்துவது தான் எங்களுக்கு சரியாக இருக்கின்றது. குவாலிஃபயருக்கு செல்வதற்கு முன்பு உத்வேகத்துடன் செல்ல முயற்சி செய்கின்றோம்.
எனவே இந்த இரண்டு போட்டிகளும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை சாய் சுதர்சன் உடனான பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருக்கின்றது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விளையாடுகின்றோம். நாங்கள் பெரிய அளவு களத்தில் பேசிக்கொள்ள மாட்டோம். நேர்மறையான எண்ணங்களுடன் நிகழ்காலத்தில் இருந்து விளையாடுவோம். எங்கள் அணியில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட், நாங்களும் முதலில் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம். ஆடுகளம் நன்றாக இருக்கின்றது. நாங்கள் தொடரை விட்டு ஏற்கனவே வெளியேறி விட்டோம். எனினும் பெருமைக்காக தான் நாங்கள் கிரிக்கெட் விளையாடுகின்றோம். நாங்கள் தற்போது மாற்று வீரர்களை பயன்படுத்தி விளையாடுகின்றோம்.
இதன் மூலம் அடுத்த சீசனுக்கு நாங்கள் சிறந்த முறையில் தயாராகுவோம் என்று நினைக்கின்றேன். இன்று எங்கள் அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று பண்ட் கூறினார்.