அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வாழ்வா? சாவா என்ற கட்டத்தில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், கில் ஆகியோர் களம் இறங்கினர். சாய் சுதர்சனிடம் இருந்த ஆரஞ்சு நிறத் தொப்பியை சூரியகுமார் மற்றும் விராட் கோலி ஆகியோர் கைப்பற்றிய நிலையில் தற்போது மீண்டும் சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு நிற தொப்பியை தன் வசப்படுத்தினார்.

மறுபுறம் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க 29 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10 புள்ளி இரண்டு ஓவரில் 93 ரன்கள் சேர்த்தது. கில் அதிரடியாக தொடர்ந்து ஆட ஜாஸ் பட்லர் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். கில் 50 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார்.
இதில் 5 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் 8 பந்துகளில் 13 ரன்கள் சேர்க்க ராகுல் திவாட்டியா நான்கு பந்துகளில் ஒன்பது ரன்களும், ஷாருக்கான் இரண்டு பந்துகளில் ஐந்து ரன்களும் எடுத்தார். கடைசி வரை அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர் 26 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் மூன்று பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கும்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 192 ஆகும். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் ரஷீத் கான் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.