மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை ரூ.18 கோடிக்கு தக்க வைக்க அந்த அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நட்சத்திர வீரர் ரஷீத் கான், கேப்டனுக்கு அளிக்கப்படும் அதே ஒப்பந்தத்தை தனக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் இன்னும் 4 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 அணிகளின் உரிமையாளர்களும் வீரர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் குஜராத் அணி இதுவரை விளையாடிய 3 சீசன்களில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், ஒரு முறை இறுதிப் போட்டியிலும் விளையாடி இருக்கிறது. கடந்த சீசனில் 2 முக்கியமான வீரர்களின் இடத்தை நிரப்ப முடியாததால், பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தடுமாறியது. இதனால் அடுத்த சீசனில் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்பது பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தீவிரமாக உள்ளார்.
அதேபோல் 6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால், அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் வீரராக கேப்டன் சுப்மன் கில்லை ரூ.18 கோடிக்கு தக்க வைக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டேவிட் மில்லரை ரூ.14 கோடிக்கு தக்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ரூ.11 கோடிக்கு வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியையும், ரூ.18 கோடிக்கு நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் கேப்டனுக்கு அளிக்கப்படும் அதே ஒப்பந்தம் தனக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதில் ரஷீத் கான் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அன்-கேப்ட் வீரராக ராகுல் டிவாட்டியாவை ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய குஜராத் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த மெகா ஏலத்திலேயே ரூ.10 கோடிக்கு மேல் ஏலத்தில் வாங்கப்பட்ட ராகுல் டிவாட்டியா, ரூ.4 கோடி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி உள்ளது. இருந்தாலும் அவருடன் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.