லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை வீழ்த்தி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. தோனி கேப்டனாக இந்த சீசனில் பொறுப்பேற்று இரண்டாவது போட்டியிலே சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிருக்கிறது.
167 ரன்கள் என்ற இலக்கில் சிஎஸ்கே அணி சேஸ் செய்தபோது கடைசி ஐந்து ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்திற்கு வந்த தோனி அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பௌண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தோனி ஒரு பாகுபலி மாதிரி. நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் எனக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். நேற்றைய ஆட்டத்தில் கூட சரியான நேரத்தில் சரியான இடத்தில் களத்திற்கு வந்தார்.
இதன் மூலம் லக்னோ அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தோனி அணியின் தலைமை பதவியை ஏற்ற உடன் முற்றிலும் மாறிவிட்டது. தோனி கேப்டன் பதவி ஏற்ற உடன் அணியும் தற்போது வித்தியாசமாக மாறிவிட்டது என்று ஹரபஜன்சிங் பாராட்டியுள்ளார். இதை தொடர்ந்து ரிஷப் பண்ட் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், லக்னோ அணி நிர்வாகம் நேற்று ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டது.
ஆயுஷ் பதோனி மற்றும் அப்துல் சமத் ஆகியோரை முன்பே இறக்கி விட்டார்கள். ஆனால் அணியில் டேவிட் மில்லர் இருக்கின்றார். அவர் ஒரு மேட்ச் வின்னர். போட்டியை எதிர் அணியிடமிருந்து கவர்ந்து செல்லக்கூடிய வீரர். ஆனால் அவரை முன்பே களத்திற்கு இறக்காமல் லக்னோ அணி தவறு செய்து விட்டது. இதேபோன்று பந்து வீசும் போது ரவி பிஷ்ணாய்க்கு ஒரு ஓவர் கண்டிப்பாக கொடுத்திருக்க வேண்டும்.
கடைசி ஐந்து ஓவர்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. பிஸ்னாய் 3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் ஒரு ஓவர் பிஸ்னாய்க்கு வழங்கி இருக்க வேண்டும். இதைப் போன்று வேகப்பந்துவீச்சாளர்கள் ஒயிட் யாக்கர் வகையான பந்துகளை வீசியிருக்க வேண்டும் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.