சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில போட்டிகளாக விளையாடவில்லை. அவர் இதுவரை 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாருடனாவது சண்டை போட்டிருக்கலாம் என சூசகமாக ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை 9.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருந்தது. தனது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் அஸ்வின் அதிக போட்டிகளில் விளையாடுவார் என்பதால் அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, அவர் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். அஸ்வின் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அந்த அணி தற்போது 10 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளைச் சந்தித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து இருக்கிறது.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கடைசியாக சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது பற்றிப் பேசிய ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணியில் அஸ்வின் சண்டை போட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது பற்றி அவர் பேசியதாவது:
"சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் சூழ்நிலையை மட்டும் வைத்து அணியைத் தேர்வு செய்வது இல்லை. அந்த அணியில் நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஒன்றாக இணைந்து பந்துவீசியிருந்தால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கும்."
"அஸ்வினுக்கு 10 கோடி ரூபாய் (9.75 கோடி) சம்பளம் அளிப்பது, அவரை வெளியே அமர வைப்பதற்காக இல்லை. அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்குப் புரியவில்லை. அவர் அணியில் யாருடனாவது சண்டை போட்டிருக்கலாம். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் மட்டும் சரியாக விளையாடாத வீரர் இல்லை. மற்றவர்களும் மிகவும் சராசரியாக விளையாடி வருகிறார்கள். ஆனால் அஸ்வின் மட்டும் தான் வெளியே அமர வைக்கப்பட்டிருக்கிறார். அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியிருக்க வேண்டும். ஏனெனில், அப்போது பந்து நன்றாக சுழன்றது" என்றார் ஹர்பஜன் சிங்.