கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் டிவைன் பிராவோ மற்றும் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகிய இருவரும் முற்றிலும் வெவ்வேறான குணங்களை உடைய நபர்கள் என ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
டிவைன் பிராவோ அதிகாலை 6 மணிக்கு தான் தூங்கச் செல்வார் ஆனால், சந்திரகாந்த் பண்டிட் அதிகாலை 5 மணிக்கு எழுவார் என சுட்டிக்காட்டி இருக்கிறார் ஹர்பஜன் சிங். மேலும், அந்த அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே எந்த வரிசையில் பேட்டிங் செய்வார் என்பதில் குழப்பம் இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது பற்றி ஹர்பஜன் சிங் பேசுகையில், "டிவைன் பிராவோ மற்றும் சந்திரகாந்த் பண்டிட் ஆகிய இருவரும் வெவ்வேறான குணம் உடையவர்கள். ஒருவர் அதிகாலை 5 மணிக்கு எழுவார், மற்றொருவர் அதிகாலை 6 மணிக்கு தான் தூங்க செல்வார். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து எப்படி பணி செய்யப் போகிறார்கள் என்பதை நாம் இனிமேல் தான் பார்க்க வேண்டும்."
"அஜிங்கியா ரஹானே தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தனது பேட்டிங் வரிசை என்ன, அதில் தான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மல்யுத்தம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். அந்த அணியில் நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் இருக்கிறார்கள். எனவே மிடில் ஆர்டரில் ரஹானே பேட்டிங் செய்ய முடியாது."
"அவருக்கு சரியான இடம் மூன்றாம் வரிசை மட்டுமே. ஏனெனில், துவக்க வீரர்களும் உறுதியாகிவிட்டார்கள். ரஹானேவை அந்த அணி கேப்டன்சிக்காக மட்டுமே தேர்வு செய்தது என்றால் நிச்சயமாக அந்தப் பணியை வேறு யாராவது செய்து இருக்கலாம். சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல் அல்லது வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை கேப்டனாக நியமித்து இருக்கலாம்."
"கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தால் மட்டுமே அஜிங்கியா ரஹானேவுக்கு அங்கு வேலை இருக்கும். 12 அல்லது 13 ஓவர்களுக்கு பிறகு பேட்டிங் செய்வது ரஹானேவின்பலம் அல்ல" என்றார் ஹர்பஜன் சிங்.