மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் எலிமினேட்டர் போட்டியில் சந்திகாரில் நேற்று முன்தினம் பலப்பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.
இந்த போட்டியின் போது சுப்மன் கில்லும், ஹர்திக் பாண்டியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ளவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர். மேலும் டாஸ் வீசும்போது ஹர்திக் பாண்டியா மற்றும் கில் ஆகியோர் கைகுலுக்கி கொள்ளாமல் விலகி சென்று விட்டதாகவும், இருவருக்குள்ளே ஈகோ போர் நிகழ்வதாகவும் சமூக வலைத்தளத்தில் பல வீடியோக்கள் வைரல் ஆகியது.

மேலும் கில் ஆட்டம் இழந்தவுடன் ஹர்திக் பாண்டியா நேராக அவரை பார்த்து கத்திக் கொண்டு சென்றதாகவும் வீடியோ வெளியாகியது. ஒரே அணியில் இந்தியாவுக்காக விளையாடிக் கொண்டிருக்கும் இருவருக்குள் ஏன் மோதல் ஏற்பட்டது? தான் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்பதால் ஹர்திக் பாண்டியா, கில் மீது கோபத்தில் இருக்கிறாரா என்று பல கேள்விகள் எழுந்தது.
மேலும் சீனியர் வீரராக ஹர்திக் பாண்டியாவை மதிக்கவில்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் ஹர்திக் பாண்டியாவை கட்டிப்பிடித்து இருப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டு, எங்கள் இருவருக்கும் அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இன்டர்நெட்டில் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தற்போது ஹர்திக் பாண்டியா பதில் எழுதி இருக்கிறார். அதில், "கண்டிப்பாக எப்பொழுதுமே சுபு பேபி" என்று அவர் கில்லை கொஞ்சி இருக்கிறார். இதைக் குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் இருவரும் அண்ணன், தம்பி நண்பர்கள் போல் பாசமாக இருப்பதாகவும், ஆனால் இந்த மீம் கிரியேட்டர்ஸ்கள் தங்களுக்கு லைக்ஸ்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கதையை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் என்று சாடி உள்ளனர்.