மும்பை: இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கிற்கு இரண்டு ஆண்டு ஐபிஎல் தடை விதிக்கப்பட உள்ளது. அவர் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு அந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.
இங்கிலாந்து அணியின் அடுத்த பென் ஸ்டோக்ஸ் என்றெல்லாம் புகழப்பட்டு வரும் ஹாரி புரூக், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டி தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்தும் கடைசி நேரத்தில் விலகினார். அப்போதும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அவர், தனது சொந்த விஷயம் காரணமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விலகினார்.
இதுபோல வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் விலகுவதால், இந்த முறை ஐபிஎல் நிர்வாகம் கடுமையான விதி ஒன்றை அமல்படுத்தி உள்ளது. ஒரு வீரர் ஏலத்தில் தன்னை பதிவு செய்து, ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்டு, பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பு தொடரில் இருந்து விலகினால், அவர் அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களுக்கு தடை செய்யப்படுவார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த வீரர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்ற விதி உள்ளது. அந்த வகையில் தற்போது காயம் போன்ற எந்த நியாயமான காரணமும் இன்றி ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் இருந்து தானாக விலகி இருப்பதால், அவருக்கு அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களுக்கு தடை விதிக்கப்படும்.
அவர் 2027 ஐபிஎல் தொடர் வரை பங்கேற்க முடியாது. அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டி ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தடை செய்யப்பட உள்ள முதல் வெளிநாட்டு வீரராக ஹாரி புரூக் இருக்கிறார்.
ஹாரி புரூக் இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில்தான் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இது பற்றி அவர் விளக்கமும் அளித்து இருக்கிறார்.
அடுத்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியம் என்பதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து வீரர்கள் இதே வேலையைத்தான் செய்து வருகின்றனர். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று, பல கோடிகளுக்கு ஏலம் போன பின்னரும், கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் அதிலிருந்து விலகி வருகின்றனர்.