டெல்லி: டெல்லி அணியின் பயிற்சியாளராக 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங் உடனான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் முனாஃப் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்பின் ரிக்கி பாண்டிங் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. ஆஃப் சீசனிலும் இந்திய வீரர்களுடன் பணியாற்றும் வகையில், இந்திய பயிற்சியாளர் ஒருவரை டெல்லி அணி நிர்வாகம் தேடி வருகிறது.

அதேபோல் இன்னொரு பக்கம் ரிடென்ஷன் பட்டியலையும் டெல்லி அணி தயார் செய்து வருகிறது. இம்முறை கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.18 கோடியும், அக்சர் படேலுக்கு ரூ.14 கோடியும், குல்தீப் யாதவிற்கு ரூ.11 கோடியும் கொடுத்து தக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உள்ளூர் வீரரான அபிஷேக் போரெலை ரூ.4 கோடிக்கு தக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதன் மூலமாக டெல்லி அணி கூடுதலாக 2 ஆர்டிஎம் வாய்ப்புகளுடன் மெகா ஏலத்தில் பங்கேற்க முடியும். அதனை ஸ்டப்ஸ் மற்றும் மெக்கர்க் ஆகியோரை வாங்க பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் பயிற்சியாளருக்கான தேடலிலும் டெல்லி அணியின் உரிமையாளர்களான பார்த் ஜிண்டால் மற்றும் கிரண் குமார் கிராந்தி இருவரும் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
சவுரவ் கங்குலி தரப்பில் சில ஆலோசகனைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முன்னாள் வீரரான ஹேமங் பதானியை தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வர டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பதானியை பொறுத்தவரை கங்குலியின் தலைமையின் கீழ் இந்திய அணிக்காக விளையாடியவர்.
அதன்பின் டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அதேபோல் ஐதராபாத் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து வந்த ஹேமங் பதானி, லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அதேபோல் பவுலிங் பயிற்சியாளராக உலகக்கோப்பை வின்னரான முனாஃப் படேலின் பெயர் முன்னிலையில் உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து கங்குலியுடன் பணியாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரில் ஹேமங் பதானி எந்த அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் இல்லையென்றாலும், அவருக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.