பெங்களூர்: டெல்லி அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் ஹேமங் பதானியும், இயக்குநராக வேணுகோபால் ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணியின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி அணியின் இயக்குநராக இருந்த சவுரவ் கங்குலி நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
டெல்லி அணியின் உரிமையாளர்களாக ஜிஎம்ஆர் நிறுவனம் மற்றும் ஜிண்டால் குரூப் இருந்து வருகின்றனர். இவர்களின் ஒப்பந்தப்படி டெல்லி அணியின் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறும். கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி அணியை ஜிண்டால் நிறுவனத்தின் பார்த் ஜிண்டால் கவனித்து வந்தார். இதனால் சவுரவ் கங்குலி அந்த அணியின் இயக்குநராக செயல்பட்டு வந்தார்.

தற்போது டெல்லி அணியின் கட்டுப்பாடுகளை ஜிஎம்ஆர் நிறுவனத்திடம் இருக்கிறது. ஆனாலும் ரிடென்ஷன், பயிற்சியாளர்கள் நியமனம், ஏலத்தின் முடிவுகள், கேப்டன்சி உள்ளிட்ட விவகாரங்கள் இரு நிறுவனங்களும் இணைந்தே முடிவுகள் எடுக்கும். இந்த நிலையில் டெல்லி அணியுடன் 7 ஆண்டுகளாக பயணித்து வந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதன் காரணமாக டெல்லி அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. யுவராஜ் சிங்கின் பெயர் அடிபட்டு வந்த நிலையில், திடீரென தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானியை தலைமைப் பயிற்சியாளராக டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் டெல்லி அணியின் இயக்குநராக முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் வரும் காலங்களில் டெல்லி அணியின் இயக்குநராக இருந்த சவுரவ் கங்குலி, இனி டெல்லி அணியின் மற்ற தொடர்களில் பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஹேமங் பதானியை பொறுத்தவரை டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராக 7 ஆண்டுகளில் 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
அதேபோல் லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் எஸ்ஏ20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக பணியாற்றிய அவர், 2 முறை கோப்பையை வென்ற பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ஐஎல்டி20 லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனால் டெல்லி அணியின் செயல்பாடுகள் புதிய பயிற்சியாளர்கள் மற்றும் இயக்குநர்களின் கீழ் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமங் பதானி டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பதால், தமிழக வீரர்கள் பலரும் அந்த அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.