லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் மிக அதிக சம்பளத்தை வாங்கும் வீரர் ரிஷப் பண்ட். கடந்த ஆண்டு ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை 27 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அவர் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் என்பதுதான் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவருக்கு இத்தனை பெரிய விலையைக் கொடுத்து ஏலத்தில் வாங்கக் காரணம்.
தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப்பில் நன்றாகவே விளையாடுகிறது. அவரது பேட்டிங் தான் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களைப் பட்டியலிட்டால் நிச்சயம் முதல் 10 இடங்களில் ரிஷப் பண்ட்டுக்கு இடம் அளிக்க முடியும். ஏனெனில், அவர் இதுவரை 198 இன்னிங்ஸ்களில் 5128 ரன்களைச் சேர்த்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 143, சராசரி 31 என்பதாக இருக்கிறது.

ஆனால், இந்த ஆண்டு எல்லாமே தலைகீழாகப் போய்விட்டது. இந்த ஆண்டு இதுவரை 7 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்திருக்கும் அவர் 106 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஒரு போட்டியில் 63 ரன்கள் சேர்த்திருக்கிறார். அந்த போட்டியை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால், மீதமுள்ள ஆறு இன்னிங்ஸ்களில் தட்டுத் தடுமாறி 43 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். அவரது ஒட்டுமொத்த பேட்டிங் சராசரி இந்த ஆண்டு 15.14 என்பதாகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 98.14 ஆகும். அந்த வகையில் மிக மோசமாக விளையாடி வருகிறார் ரிஷப் பண்ட்.
இது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். ஆனால், அந்த அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. எனவே, ரிஷப் பண்ட் கேப்டனாகப் பெரிய சிக்கல் இல்லாமல் தான் இருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறவில்லை என்றால், ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு இதே அணியில் நீடிப்பாரா? என்பது சந்தேகம்தான்.