சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் தலா ரூ.18 கோடி ஒப்பந்தம் கொடுத்து ரீடெய்ன் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி தரப்பில் 5 வீரர்களை தக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நெருங்கும் நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த மெகா ஏலத்தில், வழக்கமாக சிஎஸ்கே அணி தரப்பில் எப்போதும் அத்தனை ரீடென்ஷன் வாய்ப்புகளையும் பயன்படுத்தியுள்ளது. இதனால் இம்முறை என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனென்றால் சிஎஸ்கே அணி தரப்பில் 5 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்றால் ரூ.75 கோடி பர்ஸ் தொகையை இழக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் 2 வீரர்களுக்கு ரூ.18 கோடியும், 2 வீரர்களுக்கு தலா ரூ.14 கோடியும், ஒரு வீரருக்கு ரூ.11 கோடியும் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு அணி நிர்வாகங்களும் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவே விரும்புவதாக கூறப்படுகிறது.
ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க விரும்பாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணியின் முதல் ரீடென்ஷனாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரூ.18 கோடிக்கும், இலங்கை வேகப்பந்துவீச்சாளர் பதிரானா ரூ.14 கோடிக்கும், சிவம் துபே ரூ.11 கோடிக்கும், ரவீந்திரா ஜடேஜா ரூ.18 கோடிக்கும் தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மெகா ஏலத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.16 கோடி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயணித்து வரும் ஜடேஜாவுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் ரூ.18 கோடி ஒப்பந்தத்தை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. பதிரானாவை ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுக்க வேண்டிய தேவை வரும்.
ஏனென்றால் கடந்த சீசனிலேயே பதிரானாவை ஒப்பந்தம் செய்ய மும்பை உள்ளிட்ட நிர்வாகங்கள் அணுகின. அதனால் பதிரானா மற்றும் சிவம் துபே இருவர் விவகாரத்திலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், தோனியை ரீடெய்ன் செய்வது கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அவருக்காக தான் ஐபிஎல் விதிமுறையே மாற்றப்பட்டுள்ளதால், அவரை ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தோனி இதுவரை சிஎஸ்கே நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தாததால், இறுதி முடிவை எடுக்க முடியாமல் நிர்வாகிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது.