மும்பை: ஐபிஎல் உரிமையாளர்கள் ஏலத்தில் தங்கள் அணிகளுக்கு வீரர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள்? என்பது குறித்தும், அப்படி இருந்தும் அந்த அணிகள் தோற்பதாகவும் கே எல் ராகுல் கூறி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் வீரர்களை தேர்வு செய்வதற்கு என தனி குழுக்களை நியமித்து உள்ளன.
அவர்கள் நாடு முழுவதும் சிறப்பாக ஆடும் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஐபிஎல் ஏலத்தில் வாங்க முயற்சி செய்வார்கள். பெரும்பாலும் உள்ளூர் டி20 தொடர்களில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் கடுமையான போட்டி இருக்கும். சர்வதேச போட்டிகளில் ஆடிய வெளிநாட்டு வீரர்களை விட உள்ளூர் வீரர்களுக்கு ஏலத்தில் அதிக விலை கொடுக்கப்படும்.

அதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் அளவில் சிறந்த வீரராக இருப்பார்கள். அவர்களது புள்ளி விவரம் ஐபிஎல் உரிமையாளர்களை ஈர்க்கும். அதிக சிக்ஸ் அடித்த வீரர், அதிக பேட்டிங் ஆவரேஜ் கொண்ட வீரர், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வாங்குவார்கள்.
அது குறித்து பேசிய கே எல் ராகுல், "ஐபிஎல் உரிமையாளர்கள் வியாபார பின்னணியிலிருந்து ஐபிஎல் தொடருக்கு வருகிறார்கள். அவர்கள் ஆய்வு செய்து, தங்கள் அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்கிறார்கள். ஆனால், அந்த அணிகள் நிச்சயமாக வெல்லும் என சொல்ல முடியாது. ஒரு சிறந்த வீரரை நீங்கள் புள்ளி விவரத்தின் அடிப்படையில் வாங்கலாம். ஆனால், சில சமயம் உங்களுக்கு அந்த ஆண்டு மோசமான ஆண்டாக அமையக்கூடும். ஒவ்வொரு வீரருக்கும் விளையாட்டில் மோசமான நாள் என்பது நிச்சயம் இருக்கும்." இவ்வாறு கே எல் ராகுல் கூறி இருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுல், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா குறித்து தான் இவ்வாறு பேசி இருப்பதாக கருதப்படுகிறது, 2024 ஐபிஎல் தொடரின் போது ஒரு போட்டியில் லக்னோ அணி மோசமான தோல்வியை சந்தித்த போது, சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ராகுலிடம் கடுமையாக பேசினார். அது பெரிய சர்ச்சையாக மாறியதை அடுத்து விருந்து வைத்து சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கோயங்கா.