பெங்களூர்: ஐபிஎல் வரலாற்றில் அதிகம் கேலி செய்யப்பட்ட அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான். "அந்த அணியால் கோப்பை வெல்ல முடியாது" என இத்தனை ஆண்டு காலமாக பலரும் கேலி செய்து வந்தனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இதை வைத்து அந்த அணியை வம்பிழுத்து வந்தனர்.
2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. புள்ளிப் பட்டியலில் லீக் சுற்றின் முடிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தற்போது ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும், இதுவரை விளையாடிய 18 ஐபிஎல் தொடர்களில் ஒன்பது முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அந்த ஒன்பது வாய்ப்புகளில் நான்கு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன் 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.
ஆனால், அந்த இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்தது. தற்போது நான்காவது முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த முறை அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தாங்கள் சிறந்த ஐபிஎல் அணிகளில் ஒன்று என்பதை இந்த ஆண்டு நிரூபித்துள்ளது.
சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த முறை ஐபிஎல் கோப்பை வென்று சாதிக்குமா? இதுவரை கோப்பை வெல்லாத அணி, தோற்பதற்கான அணி என்ற பெயரை துடைத்து எறியுமா?
தற்போது முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.