மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இது 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியிடம் ஆர் சி பி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழலில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் சொதப்பி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற ரிஷப் பண்ட். நடப்பு சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் தடுமாறினார்.

இந்த நிலையில் வீரர்கள் நடப்பு சீசனில் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டிருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்த வீரர் என்றால் கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் தான். வெங்கடேஷ் ஐயருக்கு 23 கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவர் இந்த தொடரில் வெறும் 142 ரன்கள் மட்டும் தான் அடித்திருக்கிறார். இதன் மூலம் வெங்கடேஷ் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் கொல்கத்தா அணி தலா 16 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பண்ட் பிடித்திருக்கிறார். ரிஷப் பண்ட் நடப்பு சீசனில் 269 ரன்கள் அடித்திருந்தார். அவருக்கு 27 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அவர் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் தலா 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு சென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் பெற்றிருந்தார். இதில் ஸ்ரேயாஸ் மட்டும்தான் அபாரமாக விளையாடி 604 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் பஞ்சாப் அணி 4 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறது.
இதேபோன்று இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு தக்க வைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் வீரர் ஹென்றிச் கிளாசன், இந்த தொடரில் 487 ரன்கள் குவித்து இருக்கிறார். அவருக்கு 23 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் சன்ரைசர்ஸ் வழங்கியிருக்கிறது. இதேபோன்று நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த சீசனில் 21 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார்.
அவர் அடித்த 657 ரன்கள் கணக்கிட்டால் ஒரு ரன்னுக்கு மூன்று லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அவர் ஆர்சிபி அணியிடம் இருந்து பெற்று இருக்கிறார். இதேபோன்று பந்துவீச்சாளர்களில் அதிக விலைக்கு சென்ற பஞ்சாப் அணியின் ஆர்ஸ்தீப் 18 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றிருக்கிறார். நடப்பு சீசனில் அவர் 21 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 85 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்து இருக்கிறது.