மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் 4 நாட்களில் நடக்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணிக்காக 17 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலியை அந்த அணி நிர்வாகம் எப்படி ஒப்பந்தம் செய்தது என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் ஏலத்தை நடத்தியுள்ள ரிச்சர்ச் மேட்லி சில நாட்களுக்கு முன், ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரையும் ஏலத்தில் விட வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுவரை 17 ஆண்டுகளில் விராட் கோலி ஒருமுறை கூட ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றதில்லை.

சிஎஸ்கே, மும்பை அணிகளுக்கு நிகராக ஆர்சிபி அணி வளர்ச்சியடைந்ததற்கு விராட் கோலி மிக முக்கியமான காரணம். தோனி, ரோஹித் சர்மா இருவரும் ஐபிஎல் தொடரில் 2 அணிகளுக்காக விளையாடி உள்ள நிலையில், விராட் கோலி மட்டும் 17 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
19 வயதில் யு19 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். ஆனாலும் அப்போது நடந்த ஐபிஎல் ஏலத்தில் யு19 வீரர்களுக்கோ, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கோ இடமில்லை. டிராஃப் முறையில் தான் உள்ளூர் வீரர்கள் பல்வேறு அணிகளாலும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான விராட் கோலியை டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் வாங்க மறுத்தது.
ஏற்கனவே சேவாக், கம்பீர், ஷிகர் தவா, மனோஜ் திவாரி உள்ளிட்டோரை வாங்கி இருந்ததால், மீண்டும் ஒரு பேட்ஸ்மேன் வேண்டாம் என்று யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடிய வேகப்பந்துவீச்சாளரான பிரதீப் சங்வானை ஒப்பந்தம் செய்தது. இதனால் ஆர்சிபி அணியை ரூ.455 கோடி கொடுத்து வாங்கிய அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா விராட் கோலியை ஒப்பந்தம் செய்து கொண்டார்.
சொந்த அணியே கைவிட்ட போதும், ஆர்சிபி அணி கைவிடாதது அவருக்கு சென்டிமெண்டாக அணியுடன் பிணைப்பை ஏற்படுத்தியது. அப்போது விராட் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டது வெறும் ரூ.12 லட்சம் மட்டும் தான். இப்போது 17 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலிக்கு அதே ஆர்சிபி அணி ரூ.21 கோடி கொடுத்து ரீடெய்ன் செய்துள்ளது. அந்த அளவிற்கு ஆர்சிபி அணிக்காக விஸ்வாசமாகவும், உண்மையாகவும் இருந்திருக்கிறார்.
2008ஆம் ஆண்டு விராட் கோலியை ஒப்பந்தம் செய்யாததற்கு இன்று வரை டெல்லி அணி புலம்பி வருகிறது. எப்படியென்றால், அதன்பின் நடந்த யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்திய எந்த கேப்டனையும் வாங்காமல் டெல்லி அணி விட்டதில்லை. பிரித்வி ஷா, யாஷ் துல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், உன்முக்த் சந்த், ரிக்கி பூய் என்று டெல்லி அணி எப்படியாவது விராட் கோலியிடம் செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
2008ஆம் ஆண்டு நடந்த முதல் சீசனிலேயே விராட் கோலிக்கு 13 போட்டிகளில் விளையாடி வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், அடுத்த 3 ஆண்டுகளில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்புக்கு வந்தார். மேலும் அந்த சீசனிலேயே விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.