மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் திடீரென அதிகரித்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரை பாதியிலே பிசிசிஐ சஸ்பெண்ட் செய்தது. தர்மசாலாவில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் வியாழக்கிழமை மோதியது.
அப்போது பஞ்சாப் அணி 10 புள்ளி 1 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் பதான்கோட் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணி வீரர்கள் மைதானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் வீரர்கள் அனைவரும் வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லி வந்து சேர்ந்தனர். இதனால் பதற்றம் அடைந்த சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரை விட்டு விலக முடிவெடுத்திருந்தனர்.
ஆனால் இது குறித்து கேள்விப்பட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், வீரர்கள் மனதை மாற்றும் வகையில் பேசியதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ரிக்கி பாண்டிங் என தனி நபரின் பேச்சால் மட்டுமே இது சாத்தியமாகும் என நினைக்கின்றேன். பதற்றம் நிலவிய போது ரிக்கி பாண்டிங் மட்டும் நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன் என முடிவெடுத்தார்.
அது மட்டும் இல்லாமல் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைந்து சில மணி நேரம் பேசினார். இதனால் வீரர்கள் தங்களது மனதை மாற்றி கொண்டார்கள் என்று கூறினார்.அதில், இந்த பிரச்சனை ஒரு இரு நாளில் முடிந்து விடும். எவ்வளவு தடைகள் வந்தாலும் நமது குறிக்கோளை விட்டு விடக்கூடாது.
பிரச்சினையை கண்டு பாதியிலே செல்ல போகிறோமா, இல்லை கடைசி வரை போராடி பிரச்சினையை எதிர்த்து நின்றோம் என்ற மன திருப்தியை பெறப்போகிறோமா என்று பாண்டிங் பேசியதாக பஞ்சாப் கிங்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சைக் கேட்டு பல வீரர்களும் இந்தியாவில் தங்க முடிவெடுத்து விட்டார்கள். தென் ஆப்பிரிக்கா வீரர் மார்க்கோ யான்சன் மட்டும் துபாய்க்கு சென்றிருக்கிறார். அவரும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.