ஐதராபாத் : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும், ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் எந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம்? எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்பது குறித்து ஒவ்வொரு அணிகளும் பிசிசிஐக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த நிலையில் முதலாவதாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 18 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி, ரூபாயும் நான்காவது வீரருக்கு 18 கோடி ரூபாயும், ஐந்தாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும் ஒவ்வொரு அணிகளும் வழங்க வேண்டும் என்று பிசிசிஐ கூறி இருந்தது.

இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணியில் உரிமையாளரான காவியா மாறன் தென்னாப்பிரிக்கா வீரர் ஹென்றிச் கிளாசனுக்கு அதிகபட்சமாக 18 கோடி ரூபாய்க்கு பதில் 23 கோடி ரூபாயும், இரண்டாவது வீரராக கேப்டன் பாட் கமின்ஸ்க்கு 14 கோடி ரூபாய்க்கு பதில் 18 கோடி ரூபாயும், அபிஷேக் ஷர்மாவுக்கு 11 கோடி ரூபாய்க்கு பதில் 14 கோடி ரூபாயும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதேபோன்று நான்காவது வீரருக்கு வழங்கப்படும் 18 கோடி ரூபாய்க்கு பதில் டிராவிஸ் ஹெட்டுக்கு 12 கோடி ரூபாயும், ஐந்தாவது வீரருக்கு வழங்கப்படும் 14 கோடி ரூபாயிலிருந்து நிதிஷ்குமாருக்கு வெறும் எட்டு கோடி ரூபாயும் தரப்பட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.இந்த செய்தி வெளியானதில் இருந்து ஒவ்வொரு ரசிகர்களும் அது எப்படி 18 கோடிக்கு பதில் 23 கோடி தரலாம்? ஏலத்தில் விதி இருக்கிறதா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆம், ஏலத்தில் இது போல் தக்கவைக்கப்படும் வீரருக்கு சம்பளம் குறைவாகவோ இல்லை அதிகமாகவோ மாற்றிக் கொடுக்கலாம் .ஆனால் 75 கோடி ரூபாய்க்கு மேல் ஐந்து வீரர்களுக்கு செலவு செய்யக்கூடாது. இந்த சூழலில் தான் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன நிதீஷ் குமாருக்கு 11 அல்லது 14 கோடி ரூபாய் மிகவும் அதிகம் என்பதால் அவருக்கு விலையை காவியா மாறன் குறைத்து இருக்கிறார்.
இதனால் அவருக்கு குறைக்கப்பட்டிருக்கும் பணத்தை கிளாசனுக்கு மாற்றி வழங்கி இருக்கிறார். இதேபோன்று டிராவிஸ் ஹெட்க்கு வழங்கப்படும் பணத்தை குறைத்து கம்மின்ஸ் மற்றும் அபிஷேக் ஷர்மாவுக்கு காவியா மாறன் வழங்க உள்ளார். இதன் மூலம் முதல் மூன்று வீரர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. மற்ற இரண்டு வீரர்களும் குறைந்த பணத்தில் விளையாடுகிறார்கள்.
இதில் டிராவிஸ் ஹெட் ஸ்டார் வீரராக இருந்தும் அவருக்கு 12 கோடி ரூபாய் தானா இன்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் டிராவிஸ் ஹெட் சம்பளம் வெறும் 6 கோடியே 80 லட்சம் ரூபாயாகத்தான் இருந்தது. இதனால் தற்போது அவருக்கு இரு மடங்கு சம்பளம் கிடைக்கப் போகிறது. அது மட்டுமில்லாமல் ஹெட், தொடர்ந்து 14 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று கூறி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதே சமயம் ஐபிஎல் புதிய விதிப்படி மெகா ஏலத்தில் பெயர் வழங்கவில்லை என்றால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் ஏலத்தில் பங்கேற்க முடியாது. இதன் காரணமாக தமக்கு கிடைக்க வேண்டிய 18 கோடி ரூபாயிலிருந்து 12 கோடி ரூபாய் மட்டும் போதும் என கூறி இருக்கிறார். இதனால்தான் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் மற்ற வீரர்களுக்கு சென்று இருக்கிறது. இதேபோன்று ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ், தம்மால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறியிருந்தார்.
இதனால் அவருக்கு வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் என்ற சம்பளத்திலிருந்து தற்போது 18 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் விதிப்படி இரண்டாவது வீரராக கம்மின்ஸ் தக்கவைக்கப்பட்டிருந்தால் அவருக்கு 14 கோடி ரூபாயே கிடைத்திருக்கும். ஆனால் தற்போது கூடுதலாக நான்கு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. காவ்யா மாறனின் இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் மற்ற ஐபிஎல் அணி உரிமையாளர்களை ஆச்சரியப்பட செய்திருக்கிறது.