மும்பை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான ஜாகீர் கான் லக்னோ அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனுக்கு முன்பாக லக்னோ அணியின் ஆலோசகர் பணியில் இருந்த கவுதம் கம்பீர், திடீரென கேகேஆர் அணிக்கு மாறினார். அவரின் பொறுப்புக்கு ஜாகீர் கான் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் எப்படி கையெழுத்தானது என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 10 ஆண்டுகளாக ஆர்சிபி, டெல்லி, மும்பை உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியவர் ஜாகீர் கான். இந்திய அணிக்காக விளையாடுகையில் ஜாகீர் கான் காயமடைந்த போதும் இளம் வீரர்களுக்கு ஆலோசகராக பயணித்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜாகீர் கான் ஓய்வு பெற்ற பின், மும்பை அணியின் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

ஜாகீர் கானின் செயல்பாடுகளை கவனித்த மும்பை அணி நிர்வாகம், அவரை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகக் குழுவின் அங்கமாக மாற்றியது. மும்பை அணி முதலீடு செய்துள்ள எம்ஐ எமிரேட்ஸ், எம்ஐ நியூயார்க், எம்ஐ கேப்டவுன் உள்ளிட்ட அணிகளுக்காகவும் ஜாகீர் கான் பணியாற்றி வந்தார். 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் ஜாகீர் கான் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சீசனின் போது மும்பை அணியுடன் ஜாகீர் கான் பணியாற்றவில்லை. மும்பை அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது பொது வெளியிலும் அறிவிக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு முதலே ஜாகீர் கான் சொந்த பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனையறிந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, உடனடியாக ஜாகீர் கானை தொடர்பு கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சஞ்சீவ் கொயங்கா பேசுகையில், ஜாகீர் கானுடன் புதிய உறவில் இணைவது மகிழ்ச்சியான விஷயம். அவர் ஏற்கனவே ஒரு வீரராக, பயிற்சியாளராக, ஸ்ட்ராடிஜிஸ்டாக என்னை ஈர்த்துவிட்டார். வெற்றிக்கான பசியுடன் ஜாகீர் கான் இருப்பது தான் அவரை லக்னோ அணியில் ஒப்பந்தம் செய்ய காரணம். 2 வாரங்களுக்கு முன்பாக தான் ஜாகீர் கான் மும்பை அணியுடன் இல்லை என்பது தெரியும்.
உடனடியாக ஜாகீர் கானை தொடர்பு கொண்டு பேசினேன். இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், அவர் இங்கு இருக்கிறார். அவரை லக்னோ அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜாகீர் கான் பேசுகையில், லக்னோ அணி அறிமுகமாகி 3 ஆண்டுகள் தான் முடிவடைந்துள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே விளையாடி வரும் ஒரு அணிக்கான கலாச்சாரத்துடன் இருக்கிறது. 3 சீசன்களில் 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சாதாரண விஷயமில்லை. சில சிக்கல்கள் இருந்தாலும், அடுத்தடுத்து முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. லக்னோ அணியில் பவுலிங் பயிற்சியாளர் விலகி இருக்கிறார் என்பது தெரியும்.
நான் லக்னோ அணியில் இணைந்திருக்கும் சூழலில், இனியும் பவுலிங் பயிற்சியாளர் தேவையா என்ன.. லக்னோ அணியுடன் எனது பயணத்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென ஜாகீர் கானை ஒப்பந்தம் செய்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.