மும்பை: 2 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக வருவதற்கு உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் 150 கிமீ வேகத்திற்கு மேல் எளிதாக வீசக் கூடிய பவுலராக இருந்த உம்ரான் மாலிக்கின் திறமை இந்திய அணியின் விராட் கோலியை கவர்ந்தது. இதனால் இந்திய அணியில் விரைவாக வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை உம்ரான் மாலிக்கால் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாததால், பிசிசிஐ-யால் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

உம்ரான் மாலிக்கின் பவுலிங் வேகம் இருந்தாலும் துல்லியம் இல்லாதது அவருக்கு பின்னடைவாக அமைந்தது. தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக ஆடிய மயங்க் யாதவ் 150 கிமீ வேகத்துடன் துல்லியம் மற்றும் கட்டுப்பாடுடன் பவுலிங் செய்வது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் மயங்க் யாதவ் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மற்றொரு புறம் உம்ரான் மாலிக் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இதன்பின் என்சிஏவில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் உம்ரான் மாலிக், துலீப் டிராபி தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள டீம் சி அணியில் இடம்பிடித்துள்ள உம்ரான் மாலிக் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து உம்ரான் மாலிக் பேசுகையில், இப்போது உடல் மற்றும் மனதளவில் நன்றாக உணர்கிறேன். துலீப் டிராபி தொடருக்கான தயார் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளேன். நிச்சயம் இந்த சீசனில் எனது அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக உம்ரான் மாலிக் பங்கேற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கூட பெரிதாக சோபிக்கவில்லை.
ரஞ்சி டிராபியில் 5 போட்டிகளில் விளையாடிய உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளையும், சையத் முஷ்டாக் அலி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும், விஜய் ஹசாரே டிராபியில் ஒரு போட்டியில் விளையாடி விக்கெட் இன்றி 8 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக் கொடுத்தார். கடந்த சீசனை விடவும் இந்த சீசனில் உம்ரான் மாலிக் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.