மும்பை: லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-டம் ஸ்பார்க் இல்லை என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சித்துள்ளார். ரிஷப் பண்ட் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பையோ, மகிழ்ச்சியையோ பார்க்கவில்லை என்று கூறிய கில்கிறிஸ்ட், கேப்டன் பொறுப்பு மற்றும் புதிய அணி நிர்வாகம் காரணமாக அவர் அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணி சிறப்பாக தொடங்கினாலும், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-ன் மோசமான ஃபார்மே காரணமாக அமைந்துள்ளது. இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், இதுவரை மொத்தமாக 128 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.

ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவை அதிகமாகவே சோதித்து வருகிறார். ரிஷப் பண்ட்-ன் மோசமான பேட்டிங்கிற்கு அவரின் விலை, புதிய அணியை வழிநடத்தும் அழுத்தம், நிர்வாகிகள் உடனான மோதலே காரணமாக கூறப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 3 போட்டிகளில் 3லும் வென்றால் மட்டுமே, லக்னோ அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பேசுகையில், ரிஷப் பண்ட் எப்போதும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ரசித்து விளையாடக் கூடியவர். ஆனால் இந்த சீசனில் ரிஷப் பண்ட்-ஐ சிரித்த முகத்துடன் பார்க்கவே இல்லை. களத்தில் அவர் கொஞ்சமும் மகிழ்ச்சியாக காணப்படவில்லை. அதற்கு கேப்டன்சி மற்றும் புதிய அணியுடன் இணைந்தது காரணமாக இருக்கும்.
கிரிக்கெட்டை ரிஷப் பண்ட் மகிழ்ச்சியாக விளையாடவில்லை. அவரின் அதிரடியான ஆட்டத்திற்கும், ஷாட் தேர்வுக்கும் இடையில் சிறந்த இடைவெளியும், பேலன்ஸும் இருக்க வேண்டும். ஆனால் ரிஷப் பண்ட்-டிம் எந்த ஸ்பார்க்கையும் பார்க்க முடியவில்லை. ரிஷப் பண்ட் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.
கடந்த 10 முதல் 11 போட்டிகளாக ரிஷப் பண்ட்-ஐ பார்த்து வருகிறேன். தொடக்க வீரர், ஃபினிஷர், மிடில் ஆர்டர், டாப் ஆர்டர் என்று அத்தனை இடங்களிலும் விளையாடிவிட்டார். அவர் எந்த அழுத்தமும் இல்லாமல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானது. சமகால கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்-ஐ போல் ஒரு சுவாரஸ்யமான கிரிக்கெட்டரை பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.