மும்பை: பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மீது பாசம் அதிகம் என்று ஆர்சிபி முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அதனால் பஞ்சாப் அணி அவரை வாங்குவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவார் என்பதே மிகப்பெரிய விவாதமாகியுள்ளது. ஏனென்றால் சர்வதேச அளவில் ரிஷப் பண்ட்-ன் பிராண்ட் வேல்யூ உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அவரை தங்களது அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஏராளமான அணிகள் தயாராகி வருகின்றன.

ஆனால் ராஜஸ்தான், மும்பை, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட அணிகளின் பர்ஸ் தொகை குறைவாக இருப்பதால், அவர்களால் ரிஷப் பண்ட்-ஐ வாங்க முடியாது என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரிஷப் பண்ட் குறைந்தபட்சம் ரூ.25 கோடி வரை ஏலத்திற்கு செல்வார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பர்ஸ் தொகை கொண்ட பஞ்சாப், ஆர்சிபி ஆகிய அணிகளால் மட்டுமே ரிஷப் பண்ட்-ஐ வாங்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசுகையில், என்னை பொறுத்தவரை ஆர்சிபி அணியின் கைகளுக்கு ரிஷப் பண்ட் வருவார் என்று கருதவில்லை. ஏனென்றால் ரிஷப் பண்ட் மதிப்பு மிகவும் அதிகம். அனைத்து அணிகளும் அவரை வாங்க நிச்சயம் விரும்புவார்கள். அவரை வாங்குவதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் செலவு செய்ய முடியும். அவர்களும் தயாராக இருப்பதாக தெரிகிறது.
இது என்னுடைய உணர்வு தான். அதேபோல் ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் நீண்ட ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அதனால் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்வார் என்று நினைக்கிறேன். ஆனால் மெகா ஏலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை ஆர்சிபி அணி அவரை வாங்கினால் சிறப்பாக இருக்கும். ஆனால் ஆர்சிபி அணியின் கவனம் இம்முறை பவுலர்களை வாங்குவதில் தான் இருக்க வேண்டும்.
அதேபோல் தரமான ஸ்பின்னர்கள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை வாங்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக ஆர்சிபி அணி பற்றி அனில் கும்ப்ளே பேசும் போது, அந்த அணியில் நல்ல தரமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை வைத்து கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். அதனால் கர்நாடகாவின் உள்ளூர் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.
அதேபோல் மெகா ஏலத்தில் கேஎல் ராகுல் குறைந்த தொகைக்கு கிடைப்பார் என்று நினைக்கிறேன். நிச்சயம் அவர் ஆர்சிபி அணிக்குள் வந்தால், மகிழ்ச்சி தான். அவர் இன்னும் பேட்டிங் ஃபார்முக்கு வரவில்லை. ஆனால் கேஎல் ராகுல் போன்ற கிளாஸான வீரர்கள் நிச்சயம் ஃபார்முக்கு திரும்பும் வழியை கண்டறிவார்கள். அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் இடத்தை அவருக்கு பின் கேஎல் ராகுலால் நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.