சென்னை: சிபிஎல் தொடரில் 10 ஆண்டுகளாக நைட் ரைடர்ஸ் நிர்வாகத்துடன் பயணித்து வருவதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். தற்போது வரை வீரராக விளையாடி வந்த நிலையில், இனி இளம் வீரர்களுக்கு ஆலோசகராக இருந்து வழிநடத்துவதற்கு சரியான களம் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கேகேஆர் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்புக்கு சென்றார். இதனால் கேகேஆர் அணியின் அடுத்த ஆலோசகர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரின் பெயர்கள் கேகேஆர் அணியின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியது.

ஆனால் கேகேஆர் அணி திடீரென தங்களின் ஆலோசகராக டுவைன் பிராவோவை ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக டுவைன் பிராவோ பொறுப்பில் இருந்து வந்தார். 2 சீசன்களில் பிராவோ மிகச்சிறப்பாக செயல்பட்டதால், இனி அவர் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முக்கிய வீரராக இருப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் சிஎஸ்கே அணியை விட்டு பாதியிலேயே டுவைன் பிராவோ விலகியுள்ளார். இதுகுறித்து டுவைன் பிராவோ பேசுகையில், சிபிஎல் தொடரில் கடந்த 10 ஆண்டுகளாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் பயணித்து வருகிறேன். நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பல்வேறு லீக் தொடர்களில் எதிராகவும் விளையாடி இருக்கிறேன். நைட் ரைடர்ஸ் நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது எப்போதும் மிகுந்த மரியாதை இருக்கிறது.
நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கானின் ஆர்வம், நிர்வாகத்தின் செயல்பாடுகள் என்று அனைத்தும் இணைந்து குடும்பம் போல் ஒரு அணியின் ஓய்வறை சூழலை மாற்றிவிடுகிறார்கள். அதனால் நைட் ரைடர்ஸ் அணியே கொஞ்சம் ஸ்பெஷலான இடமாக மாறிவிடுகிறது. இதுவரை வீரராக இருந்து வந்த நான், இனி ஒரு பயிற்சியாளராக ஆலோசகராக அடுத்த தலைமுறை வீரர்களுக்கு பயிற்சியளிக்க சரியாக களம் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை 582 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டுவைன் பிராவோ 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களும், 631 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். முக்கியமான மைதானங்களில் டுவைன் பிராவோவுக்கு எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பதெல்லாம் எளிதாக விஷயம். இதுகுறித்து நைட் ரைடர்ஸ் நிர்வாகத்தின் சிஇஓ வெங்கி மைசூர் பேசுகையில், டுவைன் பிராவோ எங்களுடன் இணைவது ஆர்வமாக இருக்கிறது.
வெற்றிக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடக் கூடியவர். அதேபோல் அனைவரின் அறிவும், அனுபவம் டி20 லீக் கிரிக்கெட்டுக்கு நிச்சயம் பயனளிக்கும். ஐபிஎல் மட்டுமல்லாமல் டுவைன் பிராவோ சிபிஎல், எம்எல்சி மற்றும் ஐஎல்டி20 லீக் தொடர்களிலும் நைட் ரைடர்ஸ் அணிக்காக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.