மும்பை: 2015ஆம் ஆண்டு சூதாட்ட சர்ச்சை காரணமாக சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்கப்பட்ட போது, அதன் வீரர்கள் எந்த தவறும் செய்யாததால் மாற்று அணிகளுக்காக விளையாட அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சீசனில் புனே அணி 9வது இடத்தில் நிறைவு செய்தது.
இதனால் டென்ஷனான புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா , அடுத்த சீசனிலேயே தோனியை கேப்டன்சியில் இருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தார். அதுமட்டுமல்லாமல் தோனி குறித்து கோயங்கா பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே சர்ச்சையானது. இதன்பின் சிஎஸ்கே அணிக்கு திரும்பிய தோனி, கேப்டனாக 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தினார்.

அப்போது புனே அணியை வாங்கிய சஞ்சீவ் கோயங்கா தான், தற்போதைய லக்னோ அணியின் உரிமையாளர். அப்போது எப்படி தோனியை மரியாதை குறைவாக நடத்தினாரோ, அதேபோல் கடந்த சீசனில் கேப்டனாக இருந்த கேஎல் ராகுலை நடத்தினார். இதனால் கேஎல் ராகுல் லக்னோ அணியில் இருந்து விலகும் முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனியின் சிஷ்யரான ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் தோனியை போல் ரிஷப் பண்ட்-க்கும் அவமரியாதை ஏற்பட்டுவிடக் கூடாது என்று ரசிகர்கள் பலரும் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தோனியுடனான உறவு குறித்து மனம் திறந்துள்ளார். அதில், தோனியை போன்ற ஒரு தலைவனை வேறு எங்கும் பார்க்கவே முடியாது. அவரின் சிந்தனைகள், கிரிக்கெட்டை அணுகும் விதன், இந்த வயதிலும் ஒவ்வொரு சீசனுக்கும் புதுப்பித்து கொள்வது என்று தோனியின் செயல்பாடுகள் வியப்பை கொடுக்கிறது. பதிரானாவுக்கு 21 வயது மட்டுமே ஆகிறது.
அவரை ஒரு மேட்ச் வின்னராக தோனி தயார் செய்திருக்கிறார். ஒரு வீரரை எந்த நேரத்தில் எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும். தோனியுடன் ஒவ்வொரு முறை உரையாடும் போதும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். எனது பேரனுக்கு 5 அல்லது 6 வயது இருந்த போது, அவருக்கு கிரிக்கெட் விளையாட கற்றுக் கொடுத்தது தோனி தான்.
தற்போது என் பேரனுக்கு 11 வயதாகிறது. கடந்த முறை சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அப்போது தோனியுடன் சில நிமிடங்கள் பேச முடிந்தது. திடீரென என் பேரன் தோனியிடம் ஏராளமான கேள்விகளை தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்தான். இதனால் நான் பேரனிடம் சென்று, தோனியை கொஞ்சம் தனித்து விடு என்று கூறினேன்.
அதற்கு தோனி, அவர் விருப்பப்படி விடுங்கள்.. இந்த உரையாடலை நானும் ரசிக்கிறேன் என்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக எனது பேரனுடன் தோனி உரையாடிக் கொண்டே இருந்தார். அந்த சூழலில் கூட ஒரு சிறுவனுக்காக தோனி நேரம் ஒதுக்கினார். இதன் மூலமாக மற்றவர்களுடன் எப்படி பேச வேண்டும், அவர்களை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.
அதேபோல் லக்னோ அணிக்கு எதிராக சென்னை விளையாடினால், மொத்த மைதானமும் மஞ்சள் ஜெர்சியில் அவருக்கு ஆதரவளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். புனே அணியில் இருந்த போது தோனியை கடுமையாக விமர்சித்த சஞ்சீவ் கோயங்கா , தற்போது அதே தோனியை பாராட்டி புகழ்ந்து தள்ளுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.