மும்பை: இந்திய அணியின் 3 வடிவங்களிலும் விரைவாக இடம்பிடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பாராட்டுகளை பெற்றவர் திலக் வர்மா. ஐபிஎல் தொடரில் அறிமுகமாவதற்கு முன்பே அவரை வாங்க சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் போட்டிபோட்டன. அதற்கேற்ப ஐபிஎல் தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை திலக் வர்மா வெளிப்படுத்தினார்.
டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், ஃபினிஷர் என்று அத்தனை ரோல்களிலும் திலக் வர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமைந்தது. இதன் காரணமாக இந்திய டி20 அணிக்குள் இடம்பிடித்த திலக் வர்மா, அதன்பின் ஆசியக் கோப்பை தொடரிலும் கூட சேர்க்கப்பட்டார். ஆனால் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், சிவம் துபேவின் அபார எழுச்சியால் இந்திய அணியில் திலக் வர்மாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் துலீப் டிராபியின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணியின் பிளேயிங் லெவனிலும் இடம் கிடைக்காதது அவருக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த விவகாரம் குறித்து திலக் வர்மா பேசுகையில், ஐபிஎல் தொடருக்கு பின் எனது பவுலிங்கில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன். ஐபிஎல் தொடருக்கு பின் என்று சொல்வதை காட்டிலும் கடந்த ஆண்டில் இருந்தே பவுலிங்கை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் தொடங்கிவிட்டன.
தற்போது அந்த பயிற்சி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ஏனென்றால் ரெட் பாலில் சிறப்பாக பவுலிங் செய்ய பணியாற்றி வருகிறேன். ஆல்ரவுண்டராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் போது, ஒயிட் பால் கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த ஆட்டத்தை எளிதாக வெளிப்படுத்த முடியும். அதன் காரணமாகவே அதிகளவில் வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வருகிறேன். துலீப் டிராபியை பொறுத்தவரை ஒவ்வொரு வீரருக்கும் செலக்ஷன் ஆட்டம் தான்.
துலீப் டிராபி மிகமுக்கிய தொடர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கும் ஒரு அணியின் அங்கமாகவே நாம் செயல்படுகிறோம். நாம் விளையாடும் அணிக்காக அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்து, அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். சொந்த சாதனைகளுக்காக சுயநலமாக விளையாடாமல், அணியை முன்னிறுத்தி விளையாடும் வெற்றிபெற்றால், இந்திய அணியின் கதவுகள் நிச்சயம் திறக்கப்படும்.
வெற்றிபெற வேண்டும் என்பதே எனது நோக்கம். சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை உள்ளூர் போட்டிகளை விடவும் கொஞ்சம் கூடுதல் வேகத்தில் பந்துகள் வரும். அதற்கு தகுந்தவாறு நாம் விரைவாக தகவமைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்திய அணியில் செட்டிலாக நேரம் கிடைக்காது. நாம் நினைப்பதை விடவும் கூடுதலாக சிறப்பாக செயல்பட வேண்டும். இப்போது இந்திய அணி வீரர்களின் ஆட்டத்திற்கு ஈடுபட்டு அளவிற்கு எனது திறமையை மேம்படுத்தியுள்ளேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இருவருமே கூடுதல் முதிர்ச்சியுடன் இருப்பார்கள். ஏனென்றால் அங்கு அனுபவம் கொட்டி கிடக்கும். அதனை இளம் வீரராக நாம் சமாளித்து சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். அதுதான் இளம் வீரர்களுக்கு சவாலான விஷயம் என்று தெரிவித்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா கடைசியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.