பெங்களூர்: இந்திய டெஸ்ட் அணியில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக ஆர்சிபி நட்சத்திர வீரர் ரஜத் பட்டிதர் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் தன்னால் இழந்த வாய்ப்பினை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் மத்திய பிரதேச அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர். கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 8 இன்னிங்ஸில் 4 அரைசதங்கள் உட்பட 347 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இதனால் மும்பை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக அசத்தலாக விளையாடிய ரஜத் பட்டிதர், அதற்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியில் நம்பிக்கை அளித்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய போட்டிகளில் சொதப்பினார். இதனால் கடைசி ஆட்டத்தில் ரஜத் பட்டிதர் விடுவிக்கப்பட்டு, அவரது இடத்தில் தேவ்தத் படிக்கல் கொண்டு வரப்பட்டார்.
இதனால் ரஜத் பட்டிதருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்பட்டது. ஆனால் அசத்தலான ஆட்டம் மூலமாக விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ரஜத் பட்டிதர் பேசுகையில், இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
சில நேரங்களில் நமது விருப்பப்படி விஷயங்கள் நடக்காது. அதனை ஏற்றுக் கொள்ளவதே சரியான அணுகுமுறை என்று கருதுகிறேன். கிரிக்கெட் பயணத்தில் சில நேரங்களில் தோல்வியும் வரும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அந்த தோல்வியை நேரடியாக ஒப்புக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். தோல்வியில் இருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பதும் முக்கியம்.
கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி சகஜம் என்று புரிதல் இருக்கிறது. என்னால் மீண்டும் பறிபோன வாய்ப்பினை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே எனது பலத்தினை அதிகப்படுத்தும் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு வருகிறேன். எந்த பகுதிகளில் எனது ஷாட்களை அடிக்க முடிகிறதோ, அந்த ஷாட்களை பலமாக அடிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
ஐபிஎல் தொடரில் பின்பற்றிய ஸ்டைலையே சையத் முஷ்டாக் அலி தொடரிலும் பின்பற்றுகிறேன். அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, அடுத்த பந்தில் மட்டும் கவனம் வைத்து விளையாட கற்றுக் கொண்டுள்ளேன். எதிரணி மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன். பெரிய ஸ்கோர்களை அடிப்பதில் ஒருநாளும் கவனம் கொண்டதில்லை. சொந்த சாதனைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.