சென்னை: ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் மிகச்சிறப்பாக பவுலிங் செய்த போது எந்த அணியாலும் ரீ-டெய்ன் செய்யப்படாதது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பேசியுள்ளார். அடுத்த சீசனில் குஜராத் அணியால் தக்க வைக்கப்படவில்லை என்றாலும் தனக்கு கவலையில்லை என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு குஜராத் அணி அறிமுகமான முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முகமது ஷமி முக்கிய காரணமாக அமைந்தார். அதேபோல் 2வது சீசனிலும் முகமது ஷமியின் பவுலிங்கால் பவர் பிளே ஓவர்களில் குஜராத் அணி முன்னிலையில் இருந்தது. இதன்பின் உலகக்கோப்பை தொடரின் போது அடைந்த காயம் காரணமாக முகமது ஷமி ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.

முகமது ஷமி விளையாடாததன் பிரச்சனை வெளிப்படையாக ரசிகர்களுக்கு புரிந்தது. இந்த நிலையில் அடுத்த சீசனுக்கு முன் மெகா ஏலம் நடக்கும் நிலையில், ஐபிஎல் தொடர் குறித்து முகமது ஷமி பேசி இருக்கிறார். அதில், கடந்த சீசனில் குஜராத் அணி மோசமான விளையாடியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. கேப்டனாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியா அணியில் இல்லை.
காயம் காரணமாக நானும் பங்கேற்கவில்லை. குஜராத் அணிக்காக கடந்த 2 சீசன்களில் சிறப்பாக விளையாடிய இன்னும் சில வீரர்கள் நல்ல ஃபார்மில் இல்லை. இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், எந்த அணியும் நிச்சயம் பாதிப்பை சந்திக்கும். அதேபோல் அடுத்த சீசனில் எந்த அணிக்காக விளையாட வேண்டும் என்பது குறித்து என் மனதில் எந்த எண்ணமும் இல்லை.
ஏற்கனவே டெல்லி அணிக்காக விளையாடிய போது நான் ரீடெய்ன் செய்யப்படவில்லை. அதேபோல் பஞ்சாப் அணிக்காக 3 சீசன்களில் விளையாடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். அவர்களும் என்னை தக்க வைக்கவில்லை. அதன்பின் குஜராத் அணிக்காக விளையாடி இருக்கிறேன். அந்த 2 சீசன்களில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். ஒருவேளை குஜராத் அணி நிர்வாகமும் என்னை தக்கவைக்கவில்லை என்றால், நான் கவலைப்படப் போவதில்லை.
மெகா ஏலத்தில் எந்த அணியால் வாங்கப்படுகிறேனோ, அந்த அணிக்காக விளையாடுவேன். குஜராத் அணிக்கு சிறந்த வீரர்கள் தேவையென்றால் ரீடெய்ன் செய்வார்கள். ஆனால் அழகான முகங்கள் தேவையென்றால், அவர்கள் நல்ல மாடலை தேர்வு செய்து கொள்ளலாம். வாழ்க்கை குறித்து எனக்கு நல்ல புரிதல் உள்ளது. எந்த சூழலிலும் என்னால் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.