மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில், பேக் அப் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் நீக்கப்பட்ட அவர், மீண்டும் கம்பேக் கொடுக்கவிருப்பதால், அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு தொடக்கத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா விளையாடி இருந்தார். இதனால் டி20 உலகக்கோப்பையில் ஜித்தேஷ் சர்மா விளையாட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 187 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பேக் அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் நடந்த ஜிம்பாப்வே டி20 தொடர், இலங்கை டி20 தொடரிலும் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் கொண்டுள்ள இளம் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட வேண்டும் என்பதற்காக, சில புதிய வீரர்களுக்கு டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இம்முறை ஜித்தேஷ் சர்மா வாய்ப்பை தவறவிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது குறித்து ஜித்தேஷ் சர்மா பேசுகையில், கடந்த சில மாதங்களாக நிச்சயம் எனது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். வழக்கமாக பேட்டிங் செய்யும் போது, போட்டியை ஃபினிஷ் செய்யும் நோக்கத்தில் தான் விளையாடுவேன். ஆனால் டி20 உலகக்கோப்பை நெருங்கிய போது, என் மீது நானே கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி கொண்டேன்.
அதனை சமாளிக்க முடியாமல், ஃபார்மில் சிக்கல் ஏற்பட்டது. நீங்கள் சரியாக கவனித்திருந்தால், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்புக்கு பின் சில இன்னிங்ஸை சிறப்பாக ஆடியிருப்பேன். தற்போது அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்று கற்று வருகிறேன். ஐபிஎல் தொடரில் 5 முதல் 6 அரைசதங்கள் அடித்திருந்தால், நிச்சயம் டி20 உலகக்கோப்பையில் விளையாடி இருக்க முடியும். அந்த நேரத்தில் சஞ்சு சாம்சன் அபாரமான ஃபார்மில் இருந்தார். ஐசிசி தொடர்களுக்கு செல்லும் போது பேட்ஸ்மேன்கள் சிறந்த ஃபார்மில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஐபிஎல் ரிடென்ஷன் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த ஜித்தேஷ் சர்மா, பஞ்சாப் கிங்ஸ் அணி என்னை தக்க வைப்பார்களா என்பது தெரியாது. அதனால் எந்த அணிக்காக விளையாடினாலும் மகிழ்ச்சியாகவே இருப்பேன். ஆனால் விருப்பமான அணி என்றால் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தான். ஏனென்றால் உள்ளூர் கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். அவருடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கும்.
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் கூட. அதனால் சிஎஸ்கே அணிக்கு விளையாட விருப்பம். அதேபோல் மும்பை அணியில் 2016 மற்றும் 2017 சீசன்களில் இருந்திருக்கிறேன். அந்த நேரத்தில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அங்கு முடிக்கப்படாத சில விஷயங்கள் உள்ளன. பிளேயிங் லெவனில் களமிறங்கி வான்கடே மைதானத்தில் விளையாட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற வெண்டும் என்று தெரிவித்துள்ளார்.