மும்பை: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான டிம் சவுதி 100 டெஸ்ட் போட்டிகள், 161 ஒருநாள் போட்டிகள் மற்றும் 126 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவர் நடந்த சியாட் விருது விழாவில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.
அதில் டி20 உலகக்கோப்பையில் பும்ராவின் செயல்பாடுகள் குறித்து டிம் சவுதி பேசுகையில், தற்போதைய சூழலில் அனைத்து பவுலர்களை விடவும் பும்ரா தான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். 3 வடிவங்களிலும் யாராலும் அவரை தடுக்க முடியவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பாக பும்ராவுக்கு காலில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டது. இதுபோன்ற காயம் ஏற்படும் போது, பவுலர்கள் கம்பேக் கொடுப்பது எளிதாக இருக்காது.

அதேபோல் பழையபடி துல்லியத்தை பிடிப்பது சாதாரண விஷயமல்ல. அதுமட்டுமல்லாமல் 3 வடிவங்களிலும் விளையாடுவதும் நாம் நினைப்பது போல் இருக்காது. உடல்நிலை ஒத்துழைப்பதே பெரிய விஷயம். ஆனால் பும்ரா 3 வடிவங்களிலும் மிரட்டலாக செயல்பட்டுள்ளார். பும்ராவின் மிகச்சிறந்த காலம் இதுதான் என்ற நினைக்கிறேன்.
பெஸ்ட் பும்ராவை இப்போது பார்த்து வருகிறோம். அவரை விட சிறந்த பவுலர் யாரும் இப்போது இல்லை என்று பாராட்டினார். தொடர்ந்து டிம் சவுதியிடம் ஒரேயொரு நாள் நீங்கள் வேறொருவராக வாழ வேண்டுமென்றால், யாராக வாழ விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிம் சவுதி, தோனியின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்க விரும்புவேன். அதேபோல் தோனியாக இருக்கும் போது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் அறிய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஐபிஎல் தொடரில் மட்டுமே தோனி விளையாடி வரும் சூழலில், இன்றும் ஜாம்பவான் வீரர்கள் பலரும் தோனியை வியந்து பார்ப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாடும் ஒருவரால் எப்படி இப்போது லைம் லைட்டில் இருக்க முடிகிறது என்ற ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
தோனி எப்போதும் சொந்த வாழ்க்கையை வெளிப்படையாக ரசிகர்களுக்கு காட்டியதில்லை. சோசியல் மீடியாவிலும் எந்த கருத்தையும் தோனி வெளிப்படுத்தியதில்லை. இதன் காரணமாகவே தோனி குறித்த விவாதங்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.