மும்பை: எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதும் தோனியின் ரசிகனாக இருந்திருக்கிறேன் என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். எனது கடைசி கால ஐபிஎல் போட்டிகளின் போது சிஎஸ்கே அணியின் பெஞ்சில் அமர்ந்து தோனி எப்படி அணியை கையாள்கிறார், அவரின் மூளை எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி காலத்தை கொண்டாட்டமாக நிறைவு செய்ய விரும்புவதாக சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி தரப்பில் தோனி ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். இதனால் தோனியின் கடைசி சீசனில் அவரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் தோனி குறித்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் பேசுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே தோனியின் ரசிகராக இருந்து வந்துள்ளேன். கடைசி காலத்தில் கூட சிஎஸ்கே அணிக்காக விளையாட விரும்பினேன். விளையாட விரும்பினேன் என்பதை விடவும் சிஎஸ்கே அணியின் சூழலில் இருந்து தோனியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன்.
ஏனென்றால் தோனி ஒரு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர். எப்போதும் விக்கெட் கீப்பர் மற்றும் பவுலர்களுக்கு இடையில் ஒரு மிகச்சிறந்த உறவு இருக்கும். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தென்னாப்பிரிக்கா வீரர்களிடம் ஏராளமான முறை பேசி இருக்கிறேன். அவர் வீரர்களை எப்படி கையாள்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணியின் பெஞ்சில் அமர கூட தயாராக இருந்துள்ளேன். ஏனென்றால் 3 ஐசிசி தொடர்களை வென்றிருக்கிறார். 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஒருவேளை இப்போது யாரும் என்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அழைத்தால் கூட, தோனி போன்ற ஒருவரின் தலைமையின் கீழ் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.
ஏனென்றால் தோனியின் கீழ் விளையாடும் போது எனது கிரிக்கெட் குறித்த புரிதல் அதிகமாகும். இனி வரும் காலங்களில் பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன். அதனால் சிறந்த வீரரிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளும் போது, அது எனக்கும் இளம் வீரர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் யார் என்று கேட்டால் முதல் பெயராக டேல் ஸ்டெய்னின் பெயர் தான் இருக்கும். அவர் தோனியுடன் பணியாற்ற விரும்புவது சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு யாரும் வராத நிலையில், அந்த இடத்தில் டேல் ஸ்டெய்ன் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.