மும்பை: சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வியின் வயது உண்மையா என்று இந்திய வீரர் பியூஷ் சாவ்லா சந்தேகம் எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் அசத்தி வரும் சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தை பார்த்தால் 21 வயது என்பதை நம்ப முடியவில்லை என்று பியூஷ் சாவ்லா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் ரூ.8.4 கோடிக்கு வாங்கப்பட்டவர் சமீர் ரிஸ்வி. இவர் கடந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், ரஷித் கான் பந்தில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ஆச்சரியம் கொடுத்தார். கடந்த சீசனில் மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடிய சமீர் ரிஸ்வி 51 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட சமீர் ரிஸ்வி, ஐபிஎல் தொடருக்கு முழுமையாக தயாராகாதது தெரிய வந்தது. இருப்பினும் சிஎஸ்கே அணியில் நேரடியாக 21 வயதிலேயே சமீர் ரிஸ்வி இடம்பிடித்ததே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடக் கூடிய வீரரான சமீர் ரிஸ்வி, வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதாக சக வீரர்கள் பலரும் கூறியிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் தோனியும் சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தை பார்த்து பிடித்துப் போனதால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் சமீர் ரிஸ்வி நிச்சயம் அடுத்தடுத்த சீசன்களில் சிறப்பாக செயல்படுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனென்றால் ரீடெய்ன் செய்யும் அளவிற்கு சமீர் ரிஸ்வி ஸ்பெஷலான வீரர் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் சமீர் ரிஸ்வி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சமீர் ரிஸ்வி, அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பிளே ஆஃப் சுற்றில் லக்னோ ஃபால்கான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அப்போது புவனேஷ்வர் குமார் வீசிய சூப்பர் ஓவரில் கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த சமீர் ரிஸ்வி, சிக்சர் அடித்து அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்.
இந்த சீசனில் மட்டும் சமீர் ரிஸ்வி 10 போட்டிகளில் விளையாடி 366 ரன்களை விளாசியுள்ளார். இந்த நிலையில் மும்பை அணியின் சீனியர் வீரரான பியூஷ் சாவ்லா பேசுகையில், அண்மையில் சமீர் ரிஸ்வியை சந்தித்தேன். அப்போது அவரின் வயதை கேட்ட போது, 21 என்று பதிலளித்தார். எனக்கு தெரிய வரை அவரின் வயது 21ஆக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
சமீர் ரிஸ்வியின் வயது குறித்து பியூஷ் சாவ்லா சந்தேகம் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் வயது சர்ச்சையில் சில வீரர்கள் ஈடுபட்டாலும், ஐபிஎல் போன்ற தொடர்களில் வயதை மறைப்பது எளிதான விஷயம் கிடையாது. இதனால் சமீர் ரிஸ்வியின் வயது சர்ச்சைக்கு நிச்சயம் விளக்கம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.