சிட்னி: டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியில் சீனியர் வீரரான ஸ்டீவ் ஸ்மித் புறக்கணிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பாக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக சில தொடர்களில் விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித், கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்படாமல் கழற்றிவிடப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃபிரீடன் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித், 8 போட்டிகளில் விளையாடி 148.67 ஸ்ட்ரைக் ரேட்டில் 336 ரன்களை விளாசி இருக்கிறார். அதிலும் இறுதிப்போட்டியில் 52 பந்துகளில் 88 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி புறக்கணித்ததற்கு பதிலடியாக ஸ்டீவ் ஸ்மித் ஆட்டம் அமைந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட ஸ்டீவ் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார். கடைசியாக ஸ்டீவ் ஸ்மித் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தார். அதன்பின் எந்த அணியும் அவரை ஏலத்தில் வாங்க முன் வரவில்லை. இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், ஆஸ்திரேலியா டி20 அணியில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.
அவர்கள் சில வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் தேவையை புரிந்து கொள்கிறேன். உடல் வலிமை கொண்ட வீரர்களை அணிக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அதனால் கடினமாக உழைக்க வேண்டியது எனது பணியல்ல என்பதால் அதனை பற்றி சிந்திக்க விரும்பவில்லை.
ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நிச்சயமாக மெகா ஏலத்தில் எனது பெயரை கொடுப்பேன். அதன்பின் ஏலத்தில் என்ன நடக்கிறது என்பதை காண்பதற்கு ஆவலாக உள்ளேன். சிறிய நம்பிக்கையுடன் எனது பெயரை நிச்சயம் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
புனே அணியின் கேப்டனாக 2016ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். அதன்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பயணித்து வந்த ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக கழற்றிவிடப்பட்டார். இதனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.