சென்னை: ஐபிஎல் மெகா ஏலம் இன்னும் 2 வாரங்களில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அதிகளவிலான இந்திய நட்சத்திர வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்றுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மெகா ஏலத்தில் ஏராளமான சீனியர் வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
மோகித் சர்மா, உமேஷ் யாதவ், பியூஷ் சாவ்லா, அமித் மிஸ்ரா உள்ளிட்டோருடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சனும் பங்கேற்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்கும் முதல் ஏலம் இதுதான். ஏனென்றால் 2009ஆம் ஆண்டிலேயே டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகிய அவர், கடந்த 9 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார்.

இதன்பின் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக ஓய்வை அறிவித்தார். 42 வயதாகும் ஆண்டர்சன், நல்ல ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். இதனால் லீக் போட்டிகளில் விளையாடும் முடிவுக்கு வந்துள்ளார். அந்த வகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றுள்ள அவர், தனது அடிப்படை விலையாக ரூ.1.25 கோடியை நிர்ணயித்துள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசுகையில், மீண்டும் சவால் நிறைந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். அதுதான் ஐபிஎல் மெகா ஏலத்தில் பதிவு செய்ததற்கான காரணம். நான் ஏலத்தில் வாங்கப்படுவேனா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் என்னால் கிரிக்கெட்டில் எந்த அணிக்காகவும் பங்களிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை உள்ளது. என்னால் முடிந்த வரை நிச்சயம் வெற்றிபெற போராடுவேன்.
அதேபோல் விளையாடுவதற்கு தேவையான ஃபிட்னஸ் உடன் இருக்கிறேன். இன்றும் தொடர்ச்சியாக பவுலிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். அதனால் எங்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று தேடி வருகிறேன். இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் என்னை அணுகவில்லை. இருந்தாலும் மெகா ஏலத்தில் வாங்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருவேளை ஒரு கிரிக்கெட் வீரரால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் விளையாடலாம் என்று நிலை இருந்திருந்தால், 50 வயது வரை தொடர்ச்சியாக விளையாடி இருப்பேன். அந்த அளவிற்கு ஃபிட்னஸ் மட்டுமல்லாமல் நம்பிக்கையுடனும் உள்ளேன். ஆனால் இங்கிலாந்து அணி இளம் வீரர்களுடன் பயணிக்க விரும்புகிறேன். அவர்களின் பார்வையையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஐபிஎல் தொடரில் சீனியர் வீரர்களை வாங்க சிஎஸ்கே அணி எப்போதும் விருப்பம் காட்டும். அதனால் ஆண்டர்சனின் அனுபவத்திற்காகவே சிஎஸ்கே அணி அவரை வாங்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆண்டர்சன் போன்ற ஒரு வீரரை ஏலத்தில் வாங்கி, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரை பவுலிங் பயிற்சியாளராகவும் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது.