சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் பல வீரர்களும் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு அல்லது தங்கள் அணிகளால் அதிக தொகைக்குத் தக்கவைக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காமலும், விக்கெட் எடுக்காமலும் மோசமான ஆட்டங்களை ஆடி ஏமாற்றம் அளித்துள்ளனர். அப்படிப்பட்ட 11 வீரர்களைத் தேர்வு செய்து 'ஐபிஎல் ஃப்ராடு XI' அணியை உருவாக்கி இருக்கிறது ஐஸ்லாந்து கிரிக்கெட்.
ஐஸ்லாந்து கிரிக்கெட் அமைப்பின் சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது இது போன்ற வேடிக்கையான பதிவுகள் வெளியாகும். அது போன்ற ஒரு பதிவுதான் இதுவும். இந்த 'ஃப்ராடு XI' அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடரில் பண்ட் ₹27 கோடிக்குத் லக்னோ அணியால் வாங்கப்பட்டார். இந்த ஆண்டு அவர் இதுவரை 11 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து மிக மோசமாக விளையாடி இருப்பதாகவும், அதனால்தான் அவர் இந்த அணியில் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஸ்லாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்து கிரிக்கெட் தேர்ந்தெடுத்த 'ஐபிஎல் ஃப்ராடு XI':
இந்த அணியின் தொடக்க வீரர்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ராகுல் திரிபாதி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாம் வரிசையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார். இவர் இந்த ஆண்டு தான் விளையாடிய முதல் போட்டியில் சதம் அடித்தார் என்றும், அதன் பிறகு எந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றும் ஐஸ்லாந்து கிரிக்கெட் கூறியுள்ளது.
நான்காம் வரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஐந்தாம் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வெங்கடேஷ் ஐயர் தேர்வாகியுள்ளார். இவர் 2025 ஐபிஎல் ஏலத்தில் ₹23.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அவர் இதுவரை எந்தப் போட்டியிலும் தனது அணிக்கு வெற்றிக்கு உதவும் வகையில் விளையாடவில்லை என்றும், பல போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் போலப் பந்துகளை வீணடித்துச் சோதித்தார் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
ஆறாம் வரிசையில் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இடம்பெற்றுள்ளார். மீதமுள்ள பந்துவீச்சாளர்களாக/ஆல்ரவுண்டர்களாக லியாம் லிவிங்ஸ்டன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஷ்வின், மதீஷா பதிரானா, மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இம்பாக்ட் வீரராக டெல்லி கேபிடல்ஸ் அணியின் முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.