மும்பை: இந்திய இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் மற்றும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இருவரும் இணைந்து பீட்ஸ் நிறுவன விளம்பர தூதர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சில விளம்பரப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ரியான் பராக்கை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்திய அணியின் அடுத்த தலைமுறைக்கான வீரராக உருவாகி வருகிறார் சுப்மன் கில். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 24 வயதிலேயே சுப்மன் கில் நட்சத்திர வீரராக மாறியுள்ளதால், அவரை பல்வேறு நிறுவனங்களும் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மூலமாகவே ஒரு பிராண்டை மக்களிடம் கொண்டு செல்ல முடியும். அந்த வகையில் பீட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பீட்ஸ் சோலோ பட்ஸ், பீட்ஸ் சோலோ 4, பீட்ஸ் பில் உள்ளிட்ட ஹெட்போன்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான விளம்பர தூதராக சுப்மன் கில் மற்றும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுப்மன் கில் பேசுகையில், பீட்ஸ் குடும்பத்தில் நானும் ஒரு விளம்பர தூதராக இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. நான் களத்தில் எவ்வளவு உண்மையாக ரன்கள் சேர்க்க விளையாடுகிறேனோ, அதே அளவிற்கு பீட்ஸ் நிறுவனமும் தங்களின் தரத்தில் உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் பீட்ஸ் நிறுவனம் கொண்டு வரப்போகும் கேட்ஜட்ஸ்களை பயன்படுத்த ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுப்மன் கில் மற்றும் அனன்யா பாண்டே இருவரும் பீட்ஸ் ஹெட்போன்களை பயன்படுத்தி இணைந்து போட்டோகளுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் சுப்மன் கில் - அனன்யா பாண்டேவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்திய அணியின் இளம் வீரர் ரியான் பராக்கை கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடருக்கு பின் சொந்த ஊர் திரும்பிய ரியான் பராக், தனது கம்ப்யூட்டரில் அமர்ந்து வீடியோ கேம்ஸை விளையாடி கொண்டிருந்தார். அதனை ரசிகர்கள் பார்க்கும் வகையில் லைவ்-ல் யூடியூப் மூலமாக ஒளிபரப்பு செய்ய, அப்போது சில பதிப்புரிமை அல்லாத பாடல்களை தேடி ஒலிபரப்பு முயற்சித்தார்.
இதற்கு யூடியூப்பில் தேடிய போது, அவரது தேடல் ஹிஸ்ட்ரியில் அனன்யா பாண்டே ஹாட், சாரா அலி கான் ஹாட் என்று தேடியிருந்தது வெளிப்படையாக தெரிய வந்தது. இதனால் ரியான் பராக் சர்ச்சையில் சிக்கினார். ரியான் பராக்கின் தேடல் தொடர்புடைய ஸ்க்ரீன்ஷாட்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது.
இதன் காரணமாகவே ரியான் பராக்கை ரசிகர்கள் மீண்டும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். ராஜஸ்தான் அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரியான் பராக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதில் பேட்டிங்கில் மோசமான செயல்பட்டாலும், பவுலிங்கில் அசத்தலாக செயல்பட்டார். இதனால் அடுத்தடுத்து நடக்கவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் ரியான் பராக் இந்திய அணியின் முக்கியமான வீரராக இருப்பார் என்று பார்க்கப்பட்டது. இதனால் இந்திய வீரர் ரியான் பராக்கை ரசிகர்கள் எல்லை மீறி கிண்டல் செய்வது வருவதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.