மும்பை: குஜராத் அணியை வாங்கும் முடிவில் இருந்து இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் அதானி பின் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் வசம் இருக்கும் பெரும்பாலான பங்குகளை, டோரண்ட் க்ரூப்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் 2022ஆம் ஆண்டு 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் குஜராத் அணியை சிவிசி கேபிட்டல்ஸ் அணியும், லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி நிறுவன உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவும் பெரும் தொகை கொடுத்து வாங்கினர். அதில் குஜராத் அணியை சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரின் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது. இதன் மூலமாக பிசிசிஐ வருவாயும் அதிகரித்தது.

முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 2வது சீசனில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. பின்னர் 3வது சீசனில் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அந்த சீசனில் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கே முன்னேறவில்லை. இந்த நிலையில் புதிய அணிக்கான ஏலத்தின் போது இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியும் பங்கேற்றிருந்தார்.
அவர் தரப்பில் ரூ.5,100 கோடியும், டோரண்ட் க்ரூப்ஸ் தரப்பில் ரூ. 4,653 கோடியும் டெண்டர் தொகையாக அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிவிசி கேபிடல்ஸ் அணி ரூ.5,625 கோடி டெண்டரில் விண்ணப்பித்து குஜராத் அணியை கைப்பற்றியது. இருந்தாலும் அசராத அதானி, மகளிர் பிரிமியர் லீக் தொடரில் அகமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு வாங்கினார். இந்த நிலையில் சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் குஜராத் அணியின் பெரும்பாலான பங்குகளை விற்பனை செய்ய முடிவு எடுத்தது.
இதனால் மீண்டும் அதானி மற்றும் டோரண்ட் க்ரூப்ஸ் நிறுவனம் குஜராத் அணியை வாங்க முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது. குஜராத் அணி ரூ.8,390 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத் அணியை வாங்கும் முடிவில் இருந்து அதானி நிறுவனம் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் டோரண்ட் க்ரூப்ஸ் மற்றும் சிவிசி கேபிடல்ஸ் நிறுவனங்கள் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது லாக்-இன் காலம் முடிவடைந்த பின், பிசிசிஐ அனுமதியுடன் தான் இந்த ஒப்பந்தம் செய்ய முடியும். அதற்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இரு நிறுவனங்களும் காத்திருக்க வேண்டும். மேலும் குஜராத் அணியின் பெரும்பாலான பங்குகளை டோரண்ட் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நேரத்தில் குஜராத் அணியை வாங்குவதில் இருந்து அதானி நிறுவனம் பின் வாங்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.