லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், ஐபிஎல் 2025-ல் மீண்டும் களமிறங்கிய சிறிது காலத்திலேயே முதுகு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர், நியூசிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணர்களை அணுகுவதற்காக பயணிக்கவுள்ளார். இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 2022-ல் எடுத்த அதே முடிவை மயங்கும் பின்பற்றவுள்ளார்.
பும்ரா, நியூசிலாந்தில் உள்ள மருத்துவ வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராஃபி தொடரின் போது, சிட்னியில் இறுதி டெஸ்ட் போட்டியில் காயமடைந்தபோது, அவரது மருத்துவ அறிக்கைகள் நியூசிலாந்து நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டன.

மயங்க் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்தே காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. 2022 ஐபிஎல் ஏலத்தில் LSG அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், உடல் தகுதி பிரச்சினைகள் காரணமாக அந்த சீசனையும், அதற்கடுத்த சீசனையும் தவறவிட்டார். ஐபிஎல் 2024-ல், தனது திறமையை வெளிப்படுத்திய அவர், லக்னோவில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 4 ஓவர்களில் 3/27 என்ற அபாரமான பந்துவீச்சை வழங்கினார்.
அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக மீண்டும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் வரலாற்றில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு ஆட்டநாயகன் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தசைப்பிடிப்பு காரணமாக அந்த சீசன் நான்கு போட்டிகளுடன் முடிந்தது.
இருப்பினும், அவரது சிறப்பான ஆட்டம் அவருக்கு இந்திய அணியில் இடம் பெற வைத்தது. ஐபிஎல் 2025-க்கு முன், LSG அணியால் முக்கிய வீரராக தக்கவைக்கப்பட்ட மயங்க், 2024-25 உள்நாட்டு சீசனை முதுகு காயம் காரணமாக தவறவிட்டு, சீசனின் நடுவில் மீண்டும் களமிறங்கினார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.ஆனால் அவரது சராசரி 50 ஆக இருந்தது.
LSG ஆலோசகர் ஜாகிர் கான், பெங்களூருவில் உள்ள BCCI-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் உடன் இணைந்து, மயங்கின் உடல் தகுதியை பராமரிக்க கடுமையான திட்டத்தை பின்பற்றுவதாக தெரிவித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இரண்டு போட்டிகளுக்கு பிறகு முதுகு காயம் மீண்டும் தாக்கியதால், மயங்க் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்ற, இந்த முடிவை மயங்க் எடுத்துள்ளார்.