மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இடையேயான போட்டி மீண்டும் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று ஐபிஎல் தொடருக்கான மறு அட்டவணை வெளியான நிலையில், அதில் இந்தப் போட்டியும் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அன்று பாதியில் நிறுத்தப்பட்ட போட்டியான பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இடையேயான போட்டி மீண்டும் நடக்குமா, அந்தப் போட்டியின் முடிவு என்ன என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

அப்போது அந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அந்த அணி 10.1 ஓவர் வரை பேட்டிங் செய்திருந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்தப் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஐபிஎல் தொடர் சுமார் ஒரு வார காலத்திற்கு நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது.
தற்போது அந்த ஒரு வார காலம் முடிந்துள்ளது. மே 17 முதல் மீண்டும் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 17 போட்டிகளுக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இடையேயான போட்டியும் இடம்பெற்று இருக்கிறது.
இந்தப் போட்டி முதல் பந்திலிருந்து நடத்தப்படும். அதாவது இது புதிய போட்டியாகவே கருதப்பட்டு டாஸ் நிகழ்வு முதல் அனைத்தும் முழுமையாக நடைபெறும். ஏற்கனவே நடந்த 10.1 ஓவர் ஆட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. எனவே, இது இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதாக இருக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோத உள்ள இந்தப் போட்டி மே மாதம் 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
இந்த 17 போட்டிகளும் சென்னை மற்றும் ஹைதராபாத் தவிர்த்து வேறு ஆறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய ஆறு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.