மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாகப் புதிய விதிமுறை ஒன்றை அமல்படுத்தியுள்ளது. நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முதல், அனைத்து லீக் போட்டிகளுக்கும் கூடுதலாக 120 நிமிடங்கள் (2 மணி நேரம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து நடைபெற உள்ள சில லீக் போட்டிகளின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மே 17 அன்று மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைப்பட்டது. அந்தப் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. அடுத்து வரும் சில போட்டிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி இருந்தன.

இந்த நிலையில் தான் அவசரகதியில் ஐபிஎல் நிர்வாகம் அனைத்து லீக் போட்டிகளுக்கும் இரண்டு மணி நேரம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. தற்போது இரவு 10:56 மணிக்குள் போட்டிகள் முடிவடைய வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது அதிலிருந்து கூடுதலாக இரண்டு மணி நேரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் மழை குறுக்கிட்டாலும் போட்டியை நடத்துவதற்கான அதிகபட்ச முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு மட்டுமே இந்த கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக அனைத்து லீக் போட்டிகளுக்கும் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதே சமயம், இந்த விவகாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் இந்த முடிவை விமர்சித்து இருக்கிறார். "இந்தக் கூடுதல் அவகாசம் மே 17 அன்று இருந்தே அமல்படுத்தி இருக்க வேண்டும். எதற்காக இரண்டு நாள் தாமதமாக அமல்படுத்தப்படுகிறது?" இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாதிப்பைச் சந்தித்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால், கொல்கத்தா அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்பட்டது. அதன் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதைச் சுட்டிக்காட்டிதான் வெங்கி மைசூர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.