மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடக்கவுள்ளதை முன்னிட்டு, பிசிசிஐ தரப்பில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 5 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் வீரர் என்று 6 வீரர்களை ரூ.79 கோடி செலவு செய்து தக்க வைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதாவது முதலில் ரீடெய்ன் செய்யும் வீரர்களுக்கு ரூ.18 கோடியும், 2வது இடத்தில் ரீடெய்ன் செய்யும் வீரருக்கு ரூ.14 கோடியும், 3வது ரீடென்ஷனுக்கு ரூ.11 கோடியும், 4வது ரீடென்ஷனுக்கு ரூ.18 கோடியும், 5வது ரீடென்ஷனுக்கு ரூ.14 கோடியும், அன்-கேப்ட் வீரருக்கு ரூ.4 கோடியும் ஊதியமாக அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு அணிகளும் யார் யாரை ரீடெய்ன் செய்வது என்று குழம்பி போய் தீவிர விவாதத்தில் இருக்கின்றனர். ஒருவேளை எந்த வீரரையும் ரீடெய்ன் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு மெகா ஏலத்தில் 6 ஆர்டிஎம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐதராபாத் அணி தரப்பில் கிளாசனுக்கு ரூ.23 கோடியும், பேட் கம்மின்ஸ்-க்கு ரூ.18 கோடியும் அளிகக் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அபிஷேக் சர்மாவை ரூ.14 கோடிக்கு ரீடெய்ன் செய்யவும், டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரையும் ரீடெய்ன் செய்ய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஐதராபாத் அணி பிசிசிஐ தரப்பில் அளிக்கப்பட்ட ஊதியப்படி வீரர்களை ரீடெய்ன் செய்ய முடிவு எடுக்கவில்லை என்பதால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்ட விதிமுறையில் 5 சர்வதேச வீரர்களை ரீடெய்ன் செய்தால் ரூ.75 கோடி ஊதியத்தை எப்படி வேண்டுமானாலும் அந்தந்த அணி நிர்வாகங்கள் பங்கீட்டு அளித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எத்தனை கோடிக்கும் வீரரை ரீடெய்ன் செய்தாலும், 5 சர்வதேச வீரர்களை தக்க வைத்து கொண்டால், அந்த அணியின் பர்ஸ் தொகையில் இருந்து ரூ.75 கோடி கழித்து கொள்ளப்படும்.
உதாரணமாக கடந்த மெகா ஏலத்தின் போது பஞ்சாப் அணி தரப்பில் மயங்க் அகர்வால் ரூ.14 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டார். ஆனால் அந்த அணியின் பர்ஸ் தொகையில் இருந்து ரூ.16 கோடி கழித்து கொள்ளப்பட்டது. அதேபோல் கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி ரூ.8 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டார். ஆனால் அந்த அணியிடம் இருந்து ரூ.12 கோடி பர்ஸ் தொகை கழித்து கொள்ளப்பட்டது.
இதனால் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு ஊதியம் கொடுக்கலாம் என்பதை அந்த அணி நிர்வாகங்கள் முடிவு செய்து ரீடெய்ன் செய்து கொள்ளலாம். ஆனால் பர்ஸ் தொகையில் இருந்து வீரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழித்து கொள்ளப்பட்டு, மெகா ஏலத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதன் காரணமாக ஐதராபாத் அணி 3 வீரர்களுக்கான ஊதியத்தை நிர்ணயம் செய்துள்ளது.
இதன்பின் மீதமுள்ள 2 வீரர்களுக்கும் எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும், ஐதராபாத் அணி பர்ஸ் தொகையில் இருந்து ரூ.75 கோடி கழிக்கப்படும். இதனால் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்த பின், ஒரேயொரு ஆர்டிஎம் கார்டுடன் மெகா ஏலத்தில் பங்கேற்கும் என்று பார்க்கப்படுகிறது. அந்த ஆர்டிஎம் கார்டும் உள்ளூர் வீரருக்கு மட்டும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.