மும்பை: ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக எத்தனை வீரர்கள் தக்க வைக்கலாம் என்பது தொடர்பாக ரீடென்ஷன் விதிமுறைகள் வெளியாகியுள்ளன. அதன்படி ஒவ்வொரு அணியும் 5 சர்வதேச வீரர்களையும், ஒரு உள்ளூர் வீரரையும் தக்க வைக்க முடியும். ஆனால் ரீடென்ஷன் மட்டுமல்லாமல், ஆர்டிஎம் மூலமாக தக்க வைக்கலாம் என்று கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், தற்போது பிசிசிஐ தரப்பில் வீரர்களை ரீரெய்ன் செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணிகளிலும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க பிசிசிஐ தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. எந்த ஆர்டிஎம் வாய்ப்புகளும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் 18வது சீசனுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக மீண்டும் மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. இந்த முறை ஒவ்வொரு அணிகள் சார்பாகவும் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் இந்திய வீரர்களுக்கு ஏலத்தின் மூலம் கிடைக்கும் ஊதியமும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதற்கேற்ப பிசிசிஐ தரப்பில் சரியான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்கள் அணியில் உள்ள வீரர்களில் 6 பேரை தாராளமான ரீடெய்ன் செய்து கொள்ளலாம். அந்த வீரர்களையும் ரீடெய்ன் செய்வதற்கு ஒப்பந்தமும் செய்யலாம், இல்லையென்றால் மெகா ஏலத்தில் விட்டு ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தியும் வாங்கி கொள்ளலாம்.
ஒவ்வொரு அணியும் 6 வீரர்களையும் தக்க வைத்து கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை எந்த வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றால், மெகா ஏலத்தில் அந்த வீரர்களை ஆர்டிஎம் மூலம் மீண்டும் வாங்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரீடென்ஷன் மற்றும் ஆர்டிஎம் காம்பினேஷனை அந்தந்த அணி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அதற்கு ஒரேயொரு சிக்கல் மட்டும் உள்ளது. அதாவது ஒவ்வொரு அணியிலும் 5 சர்வதேச கிரிக்கெட்டர்களை தக்க வைத்து கொள்ளலாம். எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்கள் வேண்டுமானாலும் அதில் அடங்கும். அதேபோல் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களில் 2 பேரை அதிகபட்சமாக ரீடெய்ன் செய்ய முடியும்.
இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் ஒரு உள்ளூர் கிரிக்கெட் வீரரை தக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப ஐபிஎல் அணிகளின் பர்ஸ் தொகையும் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.100 கோடியாக இருந்த பர்ஸ் தொகை, இம்முறை ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரீடெய்ன் செய்யும் வீரர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்க முடியும்.
அதேபோல் கடந்த ஆண்டு வரை ஏலத்திற்கான பர்ஸ் தொகை மற்றும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கான சிறப்பு ஊதியம் இணைந்து ரூ.110 கோடி வரை செலவு செய்ய ஒரு அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சீசன் முதல் ரூ.146 கோடி வரை அணி நிர்வாகங்கள் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், வீரர்களுக்கு போட்டி ஊதியம் ரூ.7.5 லட்சம் வழங்கும் முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.