மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் ஐபிஎல் நிர்வாக குழு சில முக்கிய முடிவுகளை எடுத்து உள்ளது. குறிப்பாக எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடு, வீரர்களுக்கான போட்டி சம்பளம், தோனிக்காகவே கொண்டு வரப்படும் உள்ளூர் வீரர் விதி என எட்டு முக்கிய விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1. ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஏலத்திற்கு முன்பாக வீரர்களை நேரடியாக தக்கவைத்துக் கொள்ளலாம் அல்லது ஏலத்தின் போது ரைட் டூ மேட்ச் என்ற அட்டையை பயன்படுத்தி தங்கள் அணிக்கு வாங்கிக் கொள்ளலாம்.

2. ஒரு அணி ஆறு வீரர்களில் எத்தனை வீரர்களை தக்க வைப்பது, எத்தனை வீரர்களை ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தி வாங்குவது என்பதை அவர்களாகவே முடிவு செய்து கொள்ளலாம். தக்க வைக்கப்படும் அல்லது ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தி வாங்கப்படும் ஆறு வீரர்களில் அதிகபட்சமாக ஐந்து சர்வதேச வீரர்கள் இடம் பெறலாம். மேலும், அதிகபட்சமாக இரண்டு உள்ளூர் வீரர்கள் இடம் பெறலாம். தக்க வைக்கப்படும் ஐந்து சர்வதேச வீரர்களில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு எத்தனை பேர் இடம் பெற வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு அணி விரும்பினால் ஐந்து வெளிநாட்டு வீரர்களை கூட தக்க வைத்து கொள்ளலாம்.
3. ஏலத்தில் செலவு செய்வதற்கான தொகை முன்பு 100 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அந்த தொகை 120 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஏலத்தில் செலவிட வேண்டிய தொகையுடன் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கான தொகை மற்றும் ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 2025 ஐபிஎல் தொடரில் 146 கோடி வரை ஒரு அணி செலவு செய்யலாம். இதே தொகை 2026 இல் 151 கோடி ரூபாயாகவும், 2027 இல் 157 கோடி ரூபாயாகவும் இருக்கும்.
4. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு போட்டி சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு அணியில் ஆடும் வீரருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்சம் சம்பளமாக அளிக்கப்படும். இம்பாக்ட் வீரருக்கும் சேர்த்து இது பொருந்தும். தங்கள் அணியின் வீரர்களுக்கு ஒப்பந்தத்தின்படி அளிக்கும் சம்பளத்தோடு, கூடுதலாக போட்டி சம்பளத்தை ஒவ்வொரு அணியும் வழங்க வேண்டும்.
5. எந்த ஒரு வெளிநாட்டு வீரராக இருந்தாலும் மெகா ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்தால் மட்டுமே அடுத்து நடைபெறும் மினி ஏலத்தில் பங்கு பெற முடியும். மெகா ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யாத வீரர்கள் அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களுக்கு முன் நடக்கும் மினி ஏலத்தில் பங்கு பெற முடியாது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மெகா ஏலம் நடைபெறும் என்பதால், ஒரு வெளிநாட்டு வீரர் 2025 மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாமல் விட்டால், 2027 ஐபிஎல் தொடர் வரை அவரால் ஏலத்தில் பங்கேற்க முடியாது. 2025 முதல் 2027 வரை மூன்று ஐபிஎல் தொடர்களில் விளையாடவும் முடியாது.
6. ஒரு வீரர் ஏலத்தில் பதிவு செய்து, பின்னர் ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்ட பின்னர், ஐபிஎல் தொடர் துவங்கும் முன் தொடரில் இருந்து விலகினால் அந்த வீரர் அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் பங்கு பெற முடியாது. அவர் அடுத்த இரண்டு ஐபிஎல் சீசன்களுக்கு தடை செய்யப்படுவார்.
7. சர்வதேச போட்டிகளில் ஆடிய இந்திய வீரர், ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றாலோ, பிசிசிஐயின் ஒப்பந்தத்தை பெற்றிருக்கவில்லை என்றாலோ அவர் உள்ளூர் வீரராக கருதப்படுவார். இந்த விதி தோனியை உள்ளூர் வீரராக சிஎஸ்கே அணி தக்க வைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் தோனியின் பங்கு அதிகம் என்பதால், அவருக்காகவே பிசிசிஐ இந்த சிறப்பு விதியை அமல்படுத்தி உள்ளது.
8. 2025 முதல் 2027 வரையிலான ஐபிஎல் தொடர்களுக்கு இம்பாக்ட் வீரர் விதி பொருந்தும். அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சில அணிகளும், ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களும் அந்த விதியை விரும்பாத போதும் பிசிசிஐ அந்த விதியை தொடர முடிவு செய்து இருக்கிறது.