சென்னை: ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் செய்து வரும் தில்லாலங்கடி வேலைகள் குறித்து இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ச்சியாக பேசி வருகிறார். அதிலும் ஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள் கடைசி நேரத்தில் விலகுவதால் ஏற்படும் பிரச்சனைகள் தீவிரமாக அலசி வருகிறார்.
இதன் காரணமாக அஸ்வின் மீதும் சில விமர்சனங்கள் எழுந்தன. அதாவது, வெளிநாட்டு வீரர்களுக்கு திறமை இருக்கிறது.. அதனால் அவர்கள் பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. இதில் என்ன தவறு உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பேசியுள்ள அஸ்வின், கிரிக்கெட் வீரர்கள் சம்பாதித்து கொள்வதற்கு எதிரானவன் அல்ல.

ஐபிஎல் தொடர் என்பது இந்திய வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. முந்தைய காலத்தில் இந்திய வீரர்களுக்கு ரூ.150, ரூ.500 என்று ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சூழலில் இருந்து தான் இன்று லட்சம், கோடி என்று ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு நல்ல மதிப்பு இருக்க வேண்டும்.
எதற்காக வெளிநாட்டு வீரர்கள் விலகுவதை விமர்சிக்கிறேன் என்றால், ஒரு ஏலத்திற்கு ஒரு அணி தயாராவது எளிதான விஷயமல்ல. 8 வெளிநாட்டு வீரர்களை தான் வாங்க முடியும். ஒரு வீரரை வாங்கிவிட்டால், நிச்சயம் யோசிக்காமல் அடுத்தடுத்த திட்டங்களை உருவாக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வீரர் விலகினால், அதே தரத்தில் வீரர்கள் கிடைக்க மாட்டார்கள்.
அதன் காரணமாகவே வெளிநாட்டு வீரர்கள் செய்வது தவறு என்று சொல்கிறேன். ஒரு வீரரின் மதிப்பு ஏலத்தில் நிச்சயம் தெரிந்துவிடும். அதாவது ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் பெயரை பதிவு செய்யும் போது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஒப்புக் கொண்டு தான் வருகிறார்கள். ஆனால் ஏலம் முடிவடைந்த பின் எனக்கு ஊதியம் போதவில்லை என்று விலகிவிடுகிறார்கள்.
அடிப்படை விலையை அந்தந்த வீரர்கள் நிர்ணயிக்க முடிந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அடிப்படை விலைக்கான விதிகளை ஏற்றுக் கொண்டு ஏலத்தில் பங்கேற்றுவிட்டு, பின்னர் ஊதியம் குறைவாக இருக்கிறது என்று விலகுவதை தான் விமர்சிக்கிறோம். அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்கள் பலரும் உயிரைக் கொடுத்து விளையாடுவதையும் நாம் பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.