மும்பை: 18வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறையும் வெளிநாட்டிலேயே மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ள நிலையில், ஐபிஎல் ரிடென்ஷன் விதிமுறைகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் இறுதியிலேயே ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களை கூட்டத்தை பிசிசிஐ நடத்தியது. அந்த கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருகிறது. இதனால் ஐபிஎல் ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் பல்வேறு அணிகள் தரப்பிலும் அதிகளவிலான வீரர்களை ரிடென்ஷன் செய்யும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு முடிவுகளை எடுக்க பிசிசிஐ-க்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அணிகளும் முடிவுகளை எடுகக் முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரிடென்ஷன் விதிமுறைகள் இம்மாத இறுதிக்குள் வெளியிட பிசிசிஐ தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ரிடெய்ன் செய்யப்பட்ட வீரர்களை அறிவிக்க ஒவ்வொரு அணிகளுக்கும் நவம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் அணிகள் மெகா ஏலத்திற்கு தயாராகுவதற்கு குறைந்தபட்சம் 2 மாதங்கள் வரை நேரம் கிடைக்கும்.
அதேபோல் மெகா ஏலத்தை கடந்த ஆண்டை போலவே இம்முறையும் வெளிநாட்டிலேயே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. துபாய், அபுதாபி, தோஹா அல்லது சவுதி அரேபியா உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சவுதி அரேபியாவில் இருந்து கிரிக்கெட் மீதான முதலீடுகள் அதிகரித்திருக்கிறது.
இதனால் அங்கு மெகா ஏலத்தை நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் நவம்பர் கடைசி வாரத்தில் மெகா ஏல நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிடென்ஷன் விதிமுறைகள் இம்முறை 2018 மெகா ஏலம் மாடலில் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. 4 வீரர்களை தக்க வைத்து கொள்ள அனுமதிப்பதோடு, 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்திருக்கிறது.
இதன் மூலமாக ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள முடியும். அதேபோல் தக்க வைப்பதில் இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், எத்தனை இந்திய வீரர்களையும், எத்தனை வெளிநாட்டு வீரர்களை வேண்டுமானாலும் தக்க வைக்க அனுமதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மெகா ஏலத்தில் பங்கேற்ற பின் கடைசி நேரத்தில் பின் வாங்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கும் விதிமுறை கொண்டு வருவதில் அணி நிர்வாகங்கள் மற்றும் பிசிசிஐ ஆகிய இரு தரப்பும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலரும் ரிடென்ஷன் விதிமுறைகள் வெளியீட்டிற்காக எதிர்பார்த்துள்ளனர்.