மும்பை: பிசிசிஐ சமீபத்தில் செய்து இருக்கும் ஐபிஎல் விதி மாற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை பாதிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கலாம் என்ற விதிமுறைகள் முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.
அதில் ஒரு முக்கியமான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒரு அணி ஐந்து சர்வதேச வீரர்களை தக்க வைக்கலாம். அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் அந்த அணியின் ஒட்டுமொத்த சம்பள செலவுத் தொகையிலிருந்து (Salary Purse)கழிக்கப்படும். 2025 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி சம்பள செலவுத் தொகையை பிசிசிஐ நிர்ணயித்து இருக்கிறது. தக்க வைக்கப்படும் வீரருக்கு ஒரு அணி எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பளம் அளித்துக் கொள்ளலாம்.

ஆனால், பிசிசிஐ வகுத்து இருக்கும் குறைந்தபட்ச சம்பளத் தொகை அல்லது தக்க வைக்கப்படும் வீரருக்கு அளிக்கப்படும் சம்பளம் ஆகிய இரண்டில் எது அதிகமோ, அது அந்த அணியின் சம்பள செலவுத் தொகையில் இருந்து கழிக்கப்படும்.
உதாரணத்திற்கு சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவை முதல் வீரராக தக்க வைக்கும் பட்சத்தில், அவருக்கு 15 கோடி சம்பளம் அளிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த சம்பள செலவுத் தொகையில் இருந்து 18 கோடி கழிக்கப்படும். ஏனெனில், ஒரு அணி முதலில் தக்க வைக்கும் வீரருக்கு 18 கோடி என்ற குறைந்தபட்ச தொகை அவர்களது சம்பள செலவுத் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.

அதே சமயம், சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவுக்கு 22 கோடி ரூபாய் சம்பளம் அளித்து அவரை தக்க வைக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணியின் சம்பள செலவுத் தொகையில் இருந்து 22 கோடி கழித்துக் கொள்ளப்படும். இதற்கு முன் இருந்த விதிகளின்படி பார்க்கும்போது எந்தத் தொகை குறைவான தொகையோ, அது மட்டுமே செலவுத் தொகையிலிருந்து கழிக்கப்படும்.
ஆனால், இந்த முறை அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒரு அணி ஒரு வீரருக்கு அதிக சம்பளம் அளித்தால் அந்தத் தொகை மட்டுமே சம்பள செலவு தொகையிலிருந்து கழிக்கப்படும். எனவே, ஒரு அணியின் ஒட்டுமொத்த சம்பள செலவு தேவையான 120 கோடியில் தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு அளிக்கும் சம்பளம் முழுவதுமாக கழிக்கப்படும்.
இந்த சிக்கலான விதியால் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பாதிக்கப்படும். ஏனெனில், இந்த மூன்று அணிகளிலும் முக்கிய வீரர்கள் பலரையும் தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயம் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகளில் அதிக வீரர்களை தக்க வைக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. எனவே, இது சில அணிகளுக்கு சாதகமான முடிவாகவும், முக்கிய அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு பாதகமான முடிவாகவும் உள்ளது.