மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளின் பர்ஸ் தொகை சுமார் 30 சதவிகிதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மெகா ஏலத்தில் அணிகளின் பர்ஸ் தொகை ரூ.90 கோடியாக இருந்த நிலையில், இந்த மெகா ஏலத்திற்கான பர்ஸ் தொகை ரூ.115 கோடி முதல் ரூ.120 கோடி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தொடர்பாக ஜூலை மாதம் 10 அணிகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு அணிகளின் உரிமையாளர்களும் ஏராளமான பரிந்துரைகளை வழங்கினர். இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான ஏற்புடைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பிசிசிஐ தீவிரமாக உள்ளது.

அதற்கேற்ப ரிடென்ஷன் பாலிசிகளை வெளியிட வேண்டும் என்பதால், பிசிசிஐ தரப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தலா 5 வீரர்களை தக்க வைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் எத்தனை இந்திய வீரர்களை தக்க வைக்கலாம், எத்தனை வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்கலாம் என்பது குறித்து தகவல் வெளி வரவில்லை.
இருந்தாலும் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களில் எந்த கட்டுப்பாடும் இருக்காது என்று கூறப்படுகிறது. அதேபோல் மெகா ஏலத்தின் போது ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது ஒவ்வொரு அணிக்கும் ஒரேயொரு ஆர்டிஎம் வாய்ப்பு மட்டும் அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் மூலமாக அனைத்து அணிகளும் 6 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும். இதனால் மும்பை, கேகேஆர், சிஎஸ்கே, ஐதராபாத் அணிகளின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் மெகா ஏலம் தொடர்புடைய மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது இம்முறை ஒவ்வொரு அணிகளின் பர்ஸ் வேல்யூவையும் உயர்த்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
அதன்படி இம்முறை அணிகளின் பர்ஸ் தொகையை சுமார் ரூ.20 கோடி உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த முறை நடந்த மினி ஏலத்தின் போது அணிகளின் பர்ஸ் வேல்யூ ரூ.100 கோடியாக இருந்தது. அதேபோல் 2022ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் அணிகளின் பர்ஸ் வேல்யூ ரூ.90 கோடியாக மட்டுமே இருந்தது.
இம்முறை சுமார் ரூ.115 கோடி முதல் ரூ.120 கோடி வரை உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. கடந்த மெகா ஏலத்திற்கும், இந்த மெகா ஏலத்திற்கும் இடையில் 30 சதவிகிதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்க வைக்கப்படும் வீரர்கள் ஊதிய நிர்ணயத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.