மும்பை: 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக முக்கிய விதிகளை அறிவித்து இருந்தது பிசிசிஐ. அதில் எத்தனை வீரர்களை ஒரு அணி தக்க வைக்கலாம்? என்ற விதி மிகவும் சிக்கலான ஒன்றாக இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. முன்னதாக ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அதிகபட்சமாக இரண்டு உள்ளூர் வீரர்களையும், அதிகபட்சமாக ஐந்து சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களையும் தக்க வைக்கலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது.
தக்க வைக்கப்படும் ஐந்து வீரர்களுக்கும் வரிசைப்படி 18 கோடி, 14 கோடி, 11 கோடி, 18 கோடி மற்றும் 14 கோடி என்ற அளவில் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த விதியின் முழுமையான வடிவம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு அணி ஐந்து வீரர்களை எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் வழங்கி தக்க வைத்துக் கொள்ளலாம், அப்படி தக்க வைக்கும் போது ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டிருக்கும் சம்பளம் 75 கோடிக்கும் அதிகமாக இருந்தால் அது அந்த அணியின் வீரர்களுக்கான ஒட்டுமொத்த சம்பள அளவான 120 கோடியில் கழித்து கொள்ளப்படும்.

உதாரணத்திற்கு, ஒரு அணி 80 கோடி ரூபாய்க்கு ஐந்து வீரர்களை தக்க வைத்தால் அந்த அணியின் ஒட்டுமொத்த சம்பள செலவுத் தொகையான 120 கோடியில், 80 கோடி கழிக்கப்படும். மீதமுள்ள 40 கோடியை வைத்து அந்த அணி மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொள்ளலாம். அதே போல ஒரு அணி 50 கோடி ரூபாய்க்கு ஐந்து வீரர்களை தக்க வைத்தாலும், அந்த அணியின் ஒட்டுமொத்த செலவுத் தொகையில் இருந்து 75 கோடி கழித்து கொள்ளப்படும். அப்படி நடந்தால் அந்த அணி ஏலத்தில் 45 கோடியை மட்டுமே செலவிட முடியும்.
அதே சமயம் அந்த அணியின் ஒட்டுமொத்த செலவினங்களில் வீரர்களுக்கான சம்பளம் என்பது 50 கோடியாகவே இருக்கும். ஆனால், அவர்கள் ஏலத்தில் பயன்படுத்தக்கூடிய வீரர்களுக்கான சம்பளத் தொகையில் மட்டுமே கூடுதலாக 25 கோடி ரூபாய் கழிக்கப்பட்டு இருக்கும். இப்படி ஒரு சிக்கலான விதியை பிசிசிஐ அறிவித்திருப்பது பல ஐபிஎல் அணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு அணி எத்தனை சம்பளம் கொடுத்து வேண்டுமானாலும் ஒரு வீரரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றால் ஏன் தக்க வைக்கும் வீரர்களுக்கான சம்பளத் தொகை 18 கோடி, 14 கோடி என வரிசைப்படி இருக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி உள்ளன சில அணிகள். இதனால் வீரர்களுக்கும், அணிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
உதாரணத்திற்கு, பிசிசிஐ முதலில் தக்க வைக்கப்படும் வீரருக்கு 18 கோடி அந்த அணியின் சம்பள செலவுத் தொகையிலிருந்து கழித்து கொள்ளப்படும் என பிசிசிஐ விதியில் கூறப்பட்டு உள்ளது. ஒருவேளை அந்த அணி முதலில் தக்க வைக்கப்படும் வீரருக்கு 12 கோடி ரூபாயை மட்டுமே சம்பளமாக அளித்தால், அதனால் அந்த வீரருக்கும், அந்த அணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தங்களின் லாபத்திற்காக அந்த அணி பிசிசிஐ விதித்துள்ள அளவைவிட குறைவான சம்பளம் அளிப்பதாக அந்த வீரர் நினைக்கலாம். இது போன்ற பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் ஐபிஎல் அணிகள் அந்த விதியை எளிமையாக மாற்றுமாறு பிசிசிஐ-இடம் கோரிக்கை வைத்துள்ளன. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனைத்து ஐபிஎல் அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம்? என்ற பட்டியலை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.