மும்பை: இனியும் ஐபிஎல் அணிகளுக்கு, இந்திய வீரர்கள் விசுவாசமாக இருப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது. பிசிசிஐ கொண்டு வர உள்ள அதிரடி விதியால் இனி வீரர்கள் காட்டில் பண மழை பெய்யப் போவதே இதற்கு முக்கிய காரணம். இனி பல இந்திய வீரர்களும் மிக எளிதாக 10 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகளின் வீரர்களின் செலவுக்கான தொகையை 90 கோடியில் இருந்து 130 முதல் 140 கோடியாக அதிகரிக்க பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. அது குறித்து தற்போது ஐபிஎல் அணிகளுடன் பிசிசிஐ அதிகரிகள் பேசி வருகின்றனர். இதன் மூலம் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு கூடுதல் பணத்தை செலவு செய்ய முடியும். மறுபுறம் வீரர்களுக்கும் அதிக சம்பளம் கிடைக்கும்.

2024 ஐபிஎல் ஏலத்தின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் அசாதரணமாக 20 கோடி சம்பளத்தை தாண்டினர். ஆனால், பல சிறந்த இந்திய வீரர்கள் இன்னும் 15 கோடி என்ற சம்பளத்தை கூட எட்டவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதன் காரணமாகவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஒவ்வொரு ஐபிஎல் அணியும் மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற நிலையில் உள்ளன. தற்போது மெகா ஏலத்துக்கு முன் 5 முதல் 8 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு உள்ளன.
இந்த திட்டத்துக்கு பிசிசிஐ அனுமதி அளித்தாலும் வீரர்கள்
பலரும் ஐபிஎல் அணிகளிடம் தங்களை தக்க வைக்க வேண்டாம் என்றே கூறுவார்கள்.
ஏனெனில், இனி ஏலத்தில் அதிக தொகையை ஒரு அணியால் செலவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நல்ல வீரர்களுக்கு ஏலத்தில் போட்டா போட்டி ஏற்படும். அப்போது ஒவ்வொரு வீரருக்கும் எளிதாக ஐந்து கோடி, பத்து கோடி என்ற விலைக்கு ஏலம் கேட்கப்படும். அதே சமயம், ஒரு அணி ஒரு வீரரை தக்க வைத்தால் அவர் கடைசி ஏலத்தில் அவருக்கு என்ன தொகை அளிக்கப்பட்டதோ, அதே தொகை தான் மீண்டும் சம்பளமாக அளிக்கப்படும்.
எந்த ஒரு ஐபிஎல் அணியும் நன்றாக ஆடும் வீரரையே தக்க வைக்க நினைக்கும். ஆனால், ஒரு வீரரின் பார்வையில் பார்க்கும்போது தான் நன்றாக செயல்படும்போது தனக்கு அதிக சம்பளம் கிடைக்க வேண்டும் என்று அவர் நினைப்பார். தற்போது ஐபிஎல் அணிகள் 140 கோடி என்ற அளவுக்கு ஏலத்தில் செலவிட முடியும் என்றால், அதை பயன்படுத்திக் கொள்ளவே எந்த ஒரு வீரரும் நினைப்பார். எனவே, இனி வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு விசுவாசமாக இருப்பார்களா? அல்லது ஒவ்வொரு முறையும் ஏலத்தில் பங்கேற்று தங்களின் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முயல்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.