மும்பை: 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது. எனினும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மறுத்ததால் தான் இந்த முடிவை எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அது உண்மையா? என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடர் கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 74 போட்டிகளில் 58 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், 16 போட்டிகள் மீதம் இருக்கின்றன. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி இருக்கிறது.

மேலும் 58வது போட்டியான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அருகாமையில் இருந்த பதான்கோட் நகரத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அந்தப் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. பலரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தங்கள் நாட்டுக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் எனத் தங்கள் உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் இரண்டு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் சில ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், துணை பயிற்சியாளர்களில் ஒருவரான பிராட் ஹட்டின், வீரர்களான ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகியோர் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவிய போது இருந்தனர். அதன்பின் அனைவரும் பாதுகாப்பாக ஹோட்டலுக்குத் திரும்பினாலும், இது ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் மேலும் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருந்தது. அதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகத்திற்கு அழுத்தம் அதிகரித்தது.
இது ஒரு புறம் இருக்க, இந்திய இராணுவம் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஐபிஎல் போன்ற கேளிக்கைகள் நடத்துவது சரியாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு நேரடியாக பாதிப்புகள் இல்லை என்றாலும் கூட, இந்த நேரத்தில் ஐபிஎல் தொடரை நடத்துவது மக்கள் மத்தியில் ஐபிஎல் தொடர் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடும் என்ற காரணமும் இருந்தது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகமும், பிசிசிஐ-யும் மத்திய அரசைத் தொடர்புகொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன் முடிவிலேயே ஐபிஎல் தொடரைத் தற்காலிகமாக நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் கொடுத்தது மட்டுமே முக்கிய காரணம் என கூறிவிட முடியாது. ஆனால் அதுவும் ஒரு காரணியாக அமைந்தது.