பெங்களூர்: முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான ஆடம் கில்கிறிஸ்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஆட்டம் மற்றும் முடிவுகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். 18 சீசன்களாக விளையாடி, தற்போது 43 வயதை எட்டியுள்ள தோனியால், தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் முந்தைய ஆற்றல் இன்னும் இருக்கிறதா? அவரது மூளை கூர்மையாக இருக்கிறதா? என்று அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சீசனில் முதல்முறையாக பெங்களூரு அணி, சென்னை அணியை இரண்டு முறையும் தோற்கடித்து வரலாறு படைத்தது.

இந்த ஆட்டத்தில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது பந்துவீச்சு சரியாக அமையவில்லை. அவர் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே 32 ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசி கட்டத்தில் ரோமாரியோ ஷெப்பர்ட், கலீல் அகமதுவின் 19வது ஓவரில் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இதில் ஒரு நோ-பாலில் சிக்ஸரும் அடங்கும்.
இந்த தோல்வி குறித்துப் பேசிய கில்கிறிஸ்ட், "யாரை பந்துவீச அழைப்பது என்பதில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், கலீல் அகமது தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே 32 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில், கடைசி நேரத்தில் மீண்டும் தோனி அவரிடம் பந்தை கொடுத்தது ஆபத்தான முடிவாகத் தெரிந்தது," என்றார்.
மேலும், "தோனி அன்ஷுல் காம்போஜ் அல்லது ரவீந்திர ஜடேஜாவிடம் பந்தை கொடுத்திருக்கலாம். சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமத் தனது பந்துவீச்சை நிறைவு செய்த விதத்தை பார்த்தால், ஜடேஜாவிடம் கூடுதலாக ஒரு ஓவர் சுழற்பந்து வீச கொடுத்திருக்கலாம். இது ஒரு கலவையான ஆட்டமாக இருந்தது. சென்னை அணி 45 டாட் பந்துகளை வீசியது குறிப்பிடத்தக்கது," என்று கில்கிறிஸ்ட் குறிப்பிட்டார்.
தோனியின் நிதானமான குணம் குறித்துப் பேசிய அவர், "எம்.எஸ்... அவர் ஒருபோதும் உணர்ச்சிவசப்படுவதோ அல்லது வருத்தப்படுவதோ வெளியில் தெரியாது. ஆனால், அவருக்குள் அந்த ஆற்றல் இன்னும் அதே அளவில் உருவாகிறதா என்று நான் யோசிக்கிறேன். அவர் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கு நெருங்க நெருங்க, அவரது மூளை முன்பு போல் கூர்மையாக, சிறப்பாக செயல்படுகிறதா?" என்ற கேள்வியையும் எழுப்பினார்.
43 வயதான தோனியின் பேட்டிங் திறன் குறித்தும் கில்கிறிஸ்ட் பேசினார். யாஷ் தயாள் வீசிய ஒரு ஃபுல் டாஸ் பந்தை தோனி அடிக்கத் தவறினார், அதுவே அவரது விக்கெட்டிற்கு காரணமானது. இது குறித்துக் குறிப்பிட்ட கில்கிறிஸ்ட், "தோனி, இப்போது இருக்கும் நிலைக்கான அடையாளம் அது. அந்த ஒரு பந்தை அடிக்கத் தவறினார்... அது ஒரு ஃபுல் டாஸ் பந்து. தனது சிறப்பான ஃபார்மில் இருந்தபோது இதுபோன்ற பந்துகளை அவர் அடிக்கத் தவறியதில்லை," என்று தெரிவித்தார்.
கிரிக்கெட் உலகில் தோனிக்கு நிகரான மரியாதையை கொண்டு இருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட், தோனியின் மூளை முன்பு போல வேலை செய்கிறதா? என கேட்டு இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.